சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா: இன்று தொடக்கம்!

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா: இன்று தொடக்கம்!

சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கனிமொழி ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு முதல் மீண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதியிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செம்மொழிப் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் ஜனவரி 14 முதல் 17 வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை நகர மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா இன்று ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன.17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2023-2024-ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.2 சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.

18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள். இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.பெருநகர சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளியிடப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னையில் ஜன.13 முதல் ஜன.17 வரை நடத்தப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் காகர்லா உஷா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு கேபிள் டிவி கார்பரேஷன், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் போன்ற 16 அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!