பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: டிஜிபி ராஜேஸ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை !

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: டிஜிபி ராஜேஸ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை !

மிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பணியாற்றி வந்தவர் ராஜேஷ்தாஸ். தூத்துக்குடி எஸ்.பி, தென் மண்டல ஐ.ஜி, சென்னை தெற்கு இணை ஆணையர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கம். அதனாலேயே பல சீனியர் இருக்கையில் சிறப்பு டி.ஜி.பி-யாக அமரவைக்கப்பட்டார் ராஜேஷ் தாஸ். சமீபத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸும் சென்றுள்ளார். சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் மாவட்ட எஸ்.பியான பெண் ஐ.பி.எஸ் அதிகாரி -யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை ஐகோர்ட், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி..ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த 2021 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

இந்த ராஜேஷ் தாஸ் முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பதும் இவர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இணை ஆணையராகப் பணியாற்றியபோது சினிமா துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிவில் விவகாரம் ஒன்றில் உதவி செய்தார் என்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

தென்மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியதாகவும் ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது.

கூடங்குளம் போராட்ட பிரச்னையில் தடியடி, நூற்றுக்கணக்கானோர்மீது வழக்கு என பெரும் சர்ச்சைகளுக்கு காரணமானர் ராஜேஷ் தாஸ். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு பணியிலிருந்தவர் ராஜேஷ் தாஸ்தான்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, அத்தியாவசியப் பொருள்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மதுபானங்கள் பிளாக்கில் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளிலிருந்த மொத்த மதுபானங்களும் தனியாருக்கு கைமாற்றப்பட்டு, பிளாக்கில் ரவுண்ட் அடித்தன. இதில் பல நூறு கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக பணியாற்றியவர் இதே ராஜேஷ் தாஸ்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் செய்த அட்ராசிட்டிகள் கொஞ்சநஞ்சமில்லை என்கிறது காவல்துறை வட்டாரம். ராஜேஸ் தாஸ் சைக்கிளிங் செய்வதற்காக அவர் செல்லும் மாவட்டங்களுக்கு அவரது உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து சைக்கிளும் அனுப்பப்படுமாம். ஆனால் சைக்கிளில் ஒரு கி.மீ தூரம் கூட பயணிக்கமாட்டாராம். மீண்டும் அவரது சைக்கிளை சென்னைக்கு அனுப்பும் பொறுப்பையும் அதிகாரிகளே ஏற்க வேண்டுமாம். ‘இதுக்கு பருத்துமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே’ எனக் குமுறுவது அதிகாரிகளுக்கு வாடிக்கை.

இப்படி, முறைகேடுகளுக்கும், அடாவடிகளுக்கும் பெயர்போன அதிகாரிக்கு சட்டப்படி தண்டனைக் கிடைத்திருப்பதில் போலீஸ் வட்டாரமே மகிழ்ச்சியில் திளைக்கிறதாம்

error: Content is protected !!