பலாத்கார பெண் வழக்கில் பேசியது என்ன? சுப்ரீம் கோர்ட் நீதிபதி விளக்கம்!

பலாத்கார பெண் வழக்கில் பேசியது என்ன? சுப்ரீம் கோர்ட் நீதிபதி விளக்கம்!

நீங்கள் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்கவே இல்லை. எங்கள் கேள்வி முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது.. நாங்கள் பெண்கள் மீது உயர்வான மதிப்பை வைத்துள்ளோம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறை ஊழியரான மோஹித் சுபாஷ் சவான் என்பவர் 14 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவரிடம் கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா என நீதிபதிகள் கேள்வி கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மகளிர் அமைப்புகள், பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற கேள்வியை கேட்ட தலைமை நீதிபதி மன்னிப்பு கோர வேண்டும் எனப் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட் அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவணங்கள் அடிப்படையில்தான் கேள்வி எழுப்பினர். அவர்களாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை” எனத் தெரிவித்தார். ஆனாலும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கேட்ட கேள்விக்கு எதிராகப் பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து கண்டனம் எழுப்பி வந்தனர்.

இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டையும், தலைமை நீதிபதியையும் விமர்சிக்கும் போக்கிற்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நீதித்துறையையும், நீதிபதிகளையும் அரசியல் லாபத்துக்காக அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள் எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 14 வயதுச் சிறுமியின் வயிற்றில் வளரும் 26 வார சிசுவைக் கலைக்க அனுமதி கோரிய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உலக மகளிர் தினமான இன்று, “பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவரிடம்” கடந்த வாரம் கேட்ட கேள்வி தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் (சிறுமி) வழக்கறிஞர் வி.வி.பிஜூ ஆஜரானார். அவர் வாதிடுகை யில், “சில குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், நீதித்துறையை அவமானப்படுத்த முயல் கிறார்கள். இதைக் கையாள தனியாகச் செயல்முறை அவசியம்” எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், “எங்கள் முன் வந்த எந்த பலாத்கார வழக்கு என்று எங்களுக்கு நினைவில்லை. நான் என்னுடைய சகோதரர்களிடம் (சக நீதிபதிகள்) கேட்டேன். அவர்களுக்கும் நினைவில்லை. ஆனால், நாங்கள் பெண்கள் மீது மிகவும் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். ‘‘பலாத்காரம் செய்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா என குற்றம் சாட்டப்பட்டவரிடம் நாங்கள் கேட்கவில்லை. “நீங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகிறீர்களா” என்றுதான் நாங்கள் கேட்டோம். எங்களின் வார்த்தை முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு எப்போதும், பார் கவுன்சில் கையிலும் வழக்கறிஞர்கள் கையிலும் இருக்கிறது. என எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார்

Related Posts