சந்திரபாபு நாயுடுவுக்கு 2 வழக்குகளில் ஆந்திர ஐகோர்ட் முன் ஜாமீன்!
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், சந்திரபாபு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஜெகன்மோகன் அரசு பதிவு செய்தது.
இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல்செய்த மனு ஆந்திர ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபுவுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. சந்திரபாபுவை வரும் 16-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபைபர் நெட் வழக்கில் முன் ஜாமீன் குறித்து இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை.
இதனிடையே அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான லோகேஷ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் லோகேஷிடம் கடந்த 2 நாட்களாக விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.