ஏஐ உலகில் ‘ஏ’ சான்றிதழ்:சேட்ஜிபிடியில் இனி ‘நாட்டி சேட்ஸ்’!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. கவிதைகள் எழுதுவது முதல் கணினி புரோகிராம்கள் வரை அனைத்தையும் அசால்ட்டாகச் செய்யும் சேட்ஜிபிடி (ChatGPT), இப்போது ஒரு படி மேலே போய் ‘முதிர்ந்த’ உள்ளடக்கங்களை (Adult Content) நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இதுவரை “சாரி, என்னால் அநாகரிகமான அல்லது ஆபாசமான விஷயங்களைப் பேச முடியாது” என்று அடக்கமாகப் பதில் சொல்லி வந்த சேட்ஜிபிடி, இனி ‘நாட்டி சேட்ஸ்’ (Naughty Chats) மூலம் உங்கள் கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கத் தயாராகி வருகிறது.
தடை உடைக்கும் ஓபன் ஏஐ!
செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் இதுவரை ‘பாதுகாப்பு’ (Safety) மற்றும் ‘ஒழுக்கம்’ (Ethics) என்ற பெயரில் வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. ஆனால், ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் தற்போது இந்தத் தடையை உடைக்க ஆலோசித்து வருகிறது. பயனர்கள் விரும்பினால் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் (Optional) இந்த ‘எரோடிகா’ (Erotica) பயன்முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், காதல் கதைகள் முதல் அந்தரங்கமான உரையாடல்கள் வரை பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப உரையாடிக் கொள்ள முடியும்.

ஏன் இந்த திடீர் மாற்றம்?
சந்தையில் இருக்கும் சில போட்டி ஏஐ நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இதனால், சேட்ஜிபிடியை விட்டு விலகும் பயனர்களைத் தக்கவைக்கவும், தனிப்பட்ட ரசனைகளுக்கு மதிப்பளிக்கவும் இந்த முடிவை ஓபன் ஏஐ எடுத்துள்ளது. இது வெறும் ஆபாசம் மட்டுமல்லாமல், படைப்பாற்றல் மிக்க காதல் கதைகள் (Creative Writing) மற்றும் பாத்திரப் படைப்புகளுக்கும் (Role-play) ஒரு புதிய களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்கு கியாரண்டி உண்டா?
நிச்சயமாக! “நாட்டி சேட்ஸ்” என்ற பெயரில் எல்லாமே அனுமதிக்கப்படாது. சட்டவிரோதமான செயல்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அல்லது வன்முறையைத் தூண்டும் விஷயங்களுக்கு எப்போதும் போலக் கடும் தடை தொடரும். ஆனால், பெரியவர்களுக்கு இடையேயான கண்ணியமான மற்றும் ரசனை மிக்க உரையாடல்களுக்கு இனி சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும்.
புதிய விவாதம்: ஏஐ-க்கு உணர்வுகள் உண்டா?
இந்த அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏஐ என்பது ஒரு இயந்திரம் மட்டுமே என்றாலும், அது மனிதர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் போது, அது எந்த மாதிரியான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதே சமயம், தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் உலகம் இப்போது ‘கட்டுப்பாடற்ற’ அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சேட்ஜிபிடியின் இந்த மாற்றமே சாட்சி!
ரமாபிரபா


