’80ஸ் பில்டப்’ – விமர்சனம்!

’80ஸ் பில்டப்’ – விமர்சனம்!

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தராரித்துள்ள இந்த பில்டப் படத்தை கல்யாண் டைரக்ட் செய்து உள்ளார். ரொம்ப சிம்பிளான கதைதான் – நாயகன் சந்தானத்தின் சிஸ்டர் தன் அண்ணனிடம் உன்னாலே ஒரு பெண்ணை காதலிக்க வைக்க முடியுமா? என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் வெற்றி பெற கதிர் செய்யும் பில்டப்தான் இந்த 80’ஸ் பில்டப். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் என்பதால் எந்தவித லாஜிக்கையும் பார்க்க கூடாது என்று டைரக்டர் ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களிலும் சொல்லி வருகிறார். அதன்படி, லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரிக்க வைக்க முயல்வதில் தேறி விட்டார். இத்தனைக்கும் பெரும்பான்மையான காட்சிகள் ஒரு துக்க வீட்டில் நடப்பது போல் அமைந்தாலும், துளி கூட சோகம் இல்லாமல், சந்தானத்தின் ஒன் லைன் லட்சுமி வெடியுடன், ஆடுகளம் நரேன் – ஆனந்த்ராஜ் கூட்டணியின் சரவெடியால் காட்சிக்குக் காட்சி சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள் என்பதென்னவோ நிஜம்.

கதை என்னவென்றால் 80 காலகட்டத்தைச் சேர்ந்த ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானம் கமல் ரசிகர். அவருடைய தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் ரஜினி ரசிகர். இவர்கள் வீட்டில் புதையல் ஒன்றின் வரைபடம் இருப்பதை அறிந்துக்கொள்ளும் மன்சூர் அலிகான் ஒரு கோஷ்டியுடன், அதை கைப்பற்ற வருகிறார். அந்த கத்தியை தர வேண்டு மென்றால் மதிப்புள்ள பொருளை தருமாறு சுந்தர்ராஜன் கேட்க அவரிடம் எங்கோ திருடி வைத்திருந்த வைரத்தை கொடுக்கிறார். அவரோ அதை கற்கண்டு என்று விழுங்கி விடுகிறார். அதே சமயம் மின்விசிறியில் ஷாக் அடித்து இறந்து விடுகிறார். அவரது வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க ஆனந்தராஜை பெண் வேடம் போட்டு அழைத்து வருகின்றனர். அதே.சமயம் தன் வீட்டுக்கு , தாத்தாவின் இறப்பிற்கு வரும் தனது உறவுக்கார பெண்ணான நாயகி ராதிகா ப்ரீத்தியை பார்த்ததும் காதலில் விழும் சந்தானம், ஒரே நாளில் அவளை தன்னிடம் காதலை சொல்ல வைக்கிறேன், என்று தனது தங்கையிடம் சவால் விடுகிறார். சந்தானம் சவாலில் ஜெயித்தாரா?, அவருடைய தாத்தா வயிற்றில் இருக்கும் வைரத்தை மன்சூர் அலிகானின் குழு எடுத்தார்களா?, இல்லையா? என்பதை ஏதேதோ பண்ணி/ சொல்லி இருப்பது தான் ‘80ஸ் பில்டப்’.

நாயகன் சந்தானம் தன் வழக்கமான களமான வசனங்களில் சில பல படங்கள் கழித்து ஓரளவு சிரிக்க வைக்கிறார். காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட் என அனைத்து உணர்வுகளையும் காமெடியாக்க கொடுக்க முயன்று பாச் மார்க் வாங்கி விடுகிறார். அதிலும் ஸ்டண்ட் சீன்களில் ரஜினி ரசிகனாக மாறி ரஜினியின் உடல் மொழியை அச்சு அசலாக தன் உடலுக்குள் கொண்டு வரும் காட்சியெல்லாம் பலே.. பலே .. சொல்ல வைக்கிறது. ஹீரோயினாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி, அழகிலும் நடிப்பிலும் குழந்தை குணம் மாறாமல் இருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பவர் பல இடங்களில் நடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பதையும் வேலையாக செய்திருக்கிறார். சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை நாயகியை காட்டிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவருடைய முக பாவனை, உடல் மொழி என அனைத்தும் கவனிக்க வைக்கிறது.

ஆனால் சந்தானத்தை விட அதிகம் நகைச்சுவையில் கலக்குவது ஆனந்த ராஜும், நரேனும்தான். ஆம்.. சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் பெண் வேடம் போட்டு சந்தானத்தின் வீட்டுக்குள் நுழையும் ஆனந்தராஜ் இருவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும் நரேன் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், நாம் பார்த்திராத பெர்ஃபாமென்ஸை கொடுத்து சிரிப்பலையை கிளப்பி விடுகிறார். .

கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். மயில்சாமி மற்றும் சுவாமிநாதன் குறைவான காட்சிகளில் வந்தாலும், அவர்கள் திரையில் வரும்போதெல்லாம் ரசிகர்கள் முகத்தில் சிரிப்பு வருகிறது.

மியூசிக் டைரக்டர் ஜிப்ரான், பின்னணி இசையில் சொதப்பி விட்டார்.காமெடி படங்களுக்கு என்றே போடப்பட்டு இருக்கும் ஆர்கெஸ்டிரா வகை இசை கோர்ப்புகளை ஆங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார். அவ்வளவே. புதுமையாக கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடவே இல்லையென்பது அப்பட்டமாக கேட்கிறது. கேமராமேன் ஜேக்கப் ரத்தினராஜ், வீடொன்று மட்டுமே லொகேஷன் என்றாலும் வியக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டு தன் பில்ட் அப்பை நிரூபித்து விட்டார்.

குறுகிய காலத்தில் எடுக்க ஆசைப்பட்ட டைரக்டர் எடுத்துக் கொண்ட கதையை இன்னும் கொஞ்சம் செம்மைப்படுத்தி இருக்கலாம் என்றாலும் ஓரளவு பொழுது போக்கை அளித்து தப்பித்து விட்டார்

மொத்தத்தில் 80ஸ் பில்ட் அப் – பாஸ் மார்க்

மார்க் 3/5

error: Content is protected !!