தமிழகம் புதுவையில் இன்னும் 2 நாட்கள் மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் சென்னை தத்தளிக்கிறது. தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது வடகிழக்கு பருவமழை. இதை நம்பியே தமிழகத்தின் விவசாயம் உள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று தொடங்கியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன்.”ஈரப்பதம் மிகுந்த காற்று கிழக்கு திசையில் இருந்து வீசியதால் தென் இந்திய பகுதிகளான தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தொடர்ந்து நீடிப்பதால் 2 நாட்களுக்கு மழை தொடரும். தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் நேற்று காலை 4 மணிக்கு தொடங்கிய மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இன்றும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. “என்றார்.இந்நிலையில் தொடர் மழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.