ஜெ. ரொம்ப நல்லவருன்னு சொன்ன ஜட்ஜ் குமாரசாமி மீது சொத்துக் குவிப்புப் புகார்!

ஜெ. ரொம்ப நல்லவருன்னு சொன்ன ஜட்ஜ் குமாரசாமி மீது சொத்துக் குவிப்புப் புகார்!

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு புகார் கிளம்பி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குமாரசாமியிடம் விசாரணை நடத்த உத்தரவிடும்படி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டி, புகார் மனு அளித்துள்ளார்.
Justice-C-R-Kumaraswamy aug 28
தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, ‘கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், “கடந்த, 1997ல், குமாரசாமி, கோலார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியபோது, கர்நாடக வீட்டு வசதி வாரியம், கெங்கேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ஒதுக்கியது.

* பல்லாரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய போது, கெங்கேரி பிளாட் ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதற்கு பதிலாக, மைசூருவில், தனி வீடு ஒன்றை பெற்று உள்ளார்.

* கர்நாடக மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில், முதல் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்த குமாரசாமி மனைவி நாகரத்தினம்மா, பி.டி.ஏ.,வுக்கு விண்ணப்பித்த போது, தன் கணவர் பெயரில் உள்ள வீடு குறித்த தகவல்கள் எதையும் குறிப்பிடவில்லை. இதனால், பி.டி.ஏ., அதிகாரிகள் வீட்டு மனை ஒதுக்கீடு செய்தனர்.

* குமாரசாமி, தானாக முன்வந்து, தன் சொத்து விவரங்களை, கர்நாடக உயர் நீதிமன்ற வெப்சைட்டில் வெளியிட்டபோது, குமார பார்க் மேற்கு பகுதியில் உள்ள போலஸ்குட்டஹள்ளியில் உள்ள, ‘திவ்யா மேனர் அபார்ட்மென்ட்’டில், 29.47 லட்சம் ரூபாய்க்கு, பிளாட் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தார். மேலும், 2006ல், ஜூடிஷியல் ஊழியர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் மூலமாக, சிவநகர் ஜூடிஷியல் லே அவுட்டில், 4,000 சதுர அடி கொண்ட வீட்டுமனை பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

* பெங்களூரு உட்பட, பல இடங்களில், அசையா சொத்துகளை வாங்கியதோடு, அதை மறைத்ததற்கான தகவல்களை, நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுள்ளோம்.

எனவே குமாரசாமியும், அவரது மனைவியும் பெங்களூரு, மைசூருவில் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்துவதோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று, மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

error: Content is protected !!