இன்று விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்(இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண் வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-ஆவது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப், பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதற்காக எரிபொருள்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இப்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று புதன்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி32 என்ற 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கி. மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 12 ஆண்டுகளாகும். இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.