அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை இழக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகள் ; மாணவர் சேர்க்கை குறைவேக் காரணம்!:

அண்ணா பல்கலைக்கழக  அங்கீகாரத்தை இழக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகள் ; மாணவர் சேர்க்கை  குறைவேக் காரணம்!:

முன்னொரு காலத்தில்என்ஜினீயரிங்  படிப்பது என்பது பலருடைய கனவாக இருந்தது. பொறியியல் படிப்பு என்பது பல மாணவர்களின் லட்சியமாக இருந்தது. இதனால், பல மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த காலங்கள் உண்டு. ஆனால், 2000-க்கு பிறகு பிரைவேட் என்ஜினீயரிங்  கல்லூரிகள் அதிக அளவில் தோன்றின. இதனால், தமிழகத்தில்  என்ஜினீயரிங் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது,  என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கவும் செய்தனர்.

2000 ஆண்டுகளின் இறுதியில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பல என்ஜினீயரிங்  படித்த இளைஞர்கள் வேலை இழந்தனர். என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறையத் தொடங்கியது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் லட்சக் கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்தவர்கள் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் பிறகுதான், மாணவர்களிடையே என்ஜினீயரிங் படிப்பு மீதான ஆர்வமும் குறையத் தொடங்கியது. இதனால், பல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

ஆனாலும், இன்னும் ஐஐடி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு, என்ஜினீயரிங் படிப்பின் தரம், பொறியியல் கல்லுரிகளின் தரம் குறைந்ததே மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க முன்வராததற்கு காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நடப்பு 2023–24ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து முடிந்து கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து காணப்பட்ட நிலையில், 2023–24-ம் கல்வியாண்டில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருந்தது.ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததன் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்ல தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக கொண்ட 11 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை 2024–25ம் கல்வியாண்டில் வழங்குவதில்லை என்ற முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமல்லாமல், என்ஜினீயரிங் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் 2023–24ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட 67 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் வழங்கப்பட இருப்பதாகவும், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பல்கலைக்கழகம் முடிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!