ஜனாதிபதி & பிரதமர் பயணத்துக்கு அதிநவீன ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம்!
![ஜனாதிபதி & பிரதமர் பயணத்துக்கு அதிநவீன ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2020/10/air-one.jpg)
வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் விவிஐபி விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இதேபோல், இந்தியா தலைவர்களுக்கு விவிஐபி விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனையடுத்து, அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது. 143 டன் எடையும் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பிரமாண்ட விமானத்தில், GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமானத்தில், படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஏர் இந்தியா ஒன் விமானத்தை ஏவுகணையால் சுட்டுவீழ்த்த முடியாது என்பது தான் தனி சிறப்பாகும். இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடைநிறுத்தாமல் பயணிக்கும் திறன் கொண்டவை இந்த வகை விமானங்கள் ஆகும்.
இந்நிலையில் இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பயணிக்க உருவாக்கப்பட்ட விவிஐபி ஏர் இந்தியா ஒன் முதல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. இந்த விமானம் முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.