45 ஆயிரம் பேருடன் மோடி யோகா! டெல்லியில், ஜூன் 21–ந்தேதி நடக்கிறது!
சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் (ஜூன்) 21–ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசும், பிரதமர் மோடியும் திட்டமிட்டு உள்ளனர். அந்த நாளில் இந்தியா முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் முக்கிய அம்சமாக டெல்லி ராஜபாதையில் 45 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான தயாரிப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி யோகா பயிற்சியாளர்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
யோகா பயிற்சியை மிகவும் ஆர்வமாக மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இந்த பயிற்சி மூலம் தனக்கு அதிக பலம் கிடைப்பதாக அடிக்கடி கூறுவதுண்டு. மேலும் யோகா கலையை நாடு முழுவதும் பரப்பும் வகையில், இதற்கென தனி அமைச்சகத்தையே அவர் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.