தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான வால்ட் டிஸ்னி!

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான  வால்ட் டிஸ்னி!

ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது எல்லை இல்லாத காதல் மனிதருக்கு. ஆம்புலன்ஸ் டிரைவராக உலகப்போர் சமயத்தில் இளைஞனாக டிஸ்னி கலந்து கொள்ள போன பொழுது அவரின் வண்டி முழுக்க விலங்குகள் விதவிதமான வடிவங்களில் வரையப்பட்டு இருக்கும் அது அவரை உந்தித் தள்ளியது . தொடர்ந்து கார்டூன்கள் வரைந்துகொண்டே இருந்தார் -பல்வேறு உருவங்களை உருவாக்கினார்.

ஆனால் அவரை படைப்பாற்றல் இல்லாதவர் என்று பலர் துரத்தினார்கள்;பசி வயிற்றை கிள்ளியது,ஆஸ்வால்ட் என்கிற முயலை உருவாக்கினார் ;நல்ல பெயரை சம்பாதித்து தந்த அதையும் முட்டாள்தனமாக ஒரு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இழந்து விட்டார்.

“உங்களுக்கு கற்பனை வளம் குறைவு கிளம்புங்கள் பாஸ் “என கதவைக் காண்பித்தார்கள் . அப்போ அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னி வசித்த பொழுது எலிகளை வளர்த்தார் . சின்ன தெருவில் இருந்த தொட்டியில் இவர் போடும் சாப்பாட்டு மிச்சங்களுக்கு காத்திருக்கும் அவை இவருக்கு ஹாய் சொல்லும் . அதிலும் பிரவுன் கலர் எலி அவருக்கு ரொம்ப செல்லம். எதுவுமே இல்லாமல் ட்ரெயினில் கண்கள் கலங்க போய்க்கொண்டு இருந்தவர் கண்களில் அங்கே எதையோ கொறித்துக்கொண்டு இருந்த எலி ஒன்று கண்ணில் சிக்கியது. பிரவுன் எலியின் ஞாபகம் வந்திருக்க வேண்டும் . அதன் சேட்டைகள் இவருக்கு பிடித்திருந்தன .

கொஞ்சமாக சிரித்தார் ; பென்சிலை எடுத்துக்கொண்டார் . மனிதனின் சாயலில் ஒரு எலியை உருவாக்கினார் .!அதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைக்க,அது நன்றாக இல்லை என அவரின் மனைவி வைத்தப்பெயர் தான் மிக்கி. அந்த எலியை உருவாக்கியதற்கு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கப்பட்டது.

சிண்ட்ரெல்லாவின் கதையை அனிமேஷன் படமாக எடுக்க கிளம்பினார். ரயில்வே பாத்ரூமில் வாரத்துக்கு ஒரு முறை குளியல்,படுக்க பெட்ஷீட் இல்லாமல் திரைச்சீலையே படுக்கையாக இருந்த போதும் மனதில் மட்டும் கற்பனை வளம் பொங்கியது. ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர் களும் படத்துக்கு பிரம்மாண்ட பட்ஜெட் போட்டார். பத்து லட்சம் படங்கள் வரையப்பட்டு இரண்டே இரண்டு லட்சம் படங்கள் மட்டுமே பட உருவாக்கத்தில் பங்கு பெற்றன. கச்சிதம்,கடும் உழைப்பு எல்லாமும் சேர்ந்து உலகம் பார்க்காத பெரிய வெற்றியை தந்தன

ஒட்டுமொத்த சொத்தையும் கொட்டி மீண்டும் தானாக வறுமையை தேடிக்கொண்டு டிஸ்னி லேண்டை உருவாக்க திட்டத்தை வால்ட் டிஸ்னி தீட்டினார். ஹாலிவுட்டே ஏளனமாக பார்த்தது. அவரின் அந்த கனவுக்கு பின் சின்ன வயது அழுகைகள் இருந்தன. வறுமையால் ரயில் வண்டியில் கூட ஏற முடியாத அளவுக்கு வீட்டில் கஷ்டம். அதனால் தான் வீட்டில் சின்னதாக ஒரு ட்ராக் வைத்து அறுபது வயதில் ரயில் வண்டி விடுகிற ஒரே ஒரு ஆடம்பரம் அவருக்கு இருந்தது. மற்றபடி எளிய ஆடைகளே அணிவார்,நடந்தே பயணம் போவார். கோடிகளை கொட்டி நிறுவனத்தை உருவாக்கினார். குழந்தைகள் தங்களின் கனவுலகில் இங்கே வாழ வேண்டும் என்று ஆசை பொங்க சொன்னார்

“நீங்கள் கனவுகள் கண்டால் அதை விடாமல் துரத்துங்கள். ஒரே எலி,பெரிய கனவு இவற்றால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்த பொழுது உங்களால் முடியாதா ?” என்று டிஸ்னி சிரித்தபடியே கேட்டார். எப்படி சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது ,” குழந்தைகளின் உலகில் குழந்தையாகவே வாழ்கிறேன் நான் !” என்றார் அவர். நம்பினால் நம்புங்கள் மொத்தம் அறுபத்தி நான்கு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருபத்தி ஆறு முறை வென்று இருக்கும் இவரின் சாதனை எப்பொழுதும் நிலைத்து நிற்கும்.

 

வால்ட் டிஸ்னி பிறந்த நாள் இன்று

error: Content is protected !!