தமிழகத்தில் குடிநோயாளிகளை அதிகரிக்கும் டாஸ்மாக்:- ஐகோர்ட் காட்டம்!

தமிழகத்தில் குடிநோயாளிகளை அதிகரிக்கும் டாஸ்மாக்:- ஐகோர்ட் காட்டம்!

தமிழ் நாட்டில்தான் குடி நோயாளிகள் அதிகம். அதைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடை களின் நேரத்தை குறைக்க முடியுமா? என்று தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நம் தமிழகத்தில் 5,000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தை விட டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம். சாதாரண நாட்களில் 70 கோடி ரூபாய் வருமானமும், பண்டிகை நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானமும் இதற்குக் கிடைக்கும். அதிலும் 2017-18ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வாணிபக் கழகம் தாக்கல் செய்துள்ள 35ஆவது ஆண்டறிக்கையில், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தஞ்சை பள்ளியக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிப்படி டாஸ்மாக கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோவிலோ, கல்வி நிறுவனங்களோ இருக்க கூடாது. ஆனால், பள்ளியக்கரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே, பேருந்து நிலையம், மாநகராட்சி அரசுப்பள்ளியும், விட்டல் மெட்ரிகுலேசன் பள்ளியும், பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும். ஆகவே, பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இதே போல டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜரானார். அரசுத் தரப்பில் தமிழகத்தில் 2 கட்டங்களாக 1,000 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சந்தேகம் எழும் பட்சத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்கான சான்றை சரிபார்க்கவும் அறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திலேயே குறைவான நேரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மது விற்பனை குறைந்துள்ளது. மது விலை உயர்வால்தான், வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 30,000 கோடி வருவாய் அதன் காரணமாகவே அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் குடிநோயாளிகள் அதிகமாக உள்ளன.தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா? என கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் பார்களை நிரந்தரமாக மூட வேண்டும். அது போல தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கடை களுக்கு முன்பாக திறக்கக்கூடாது எனக்கூறி, தமிழகத்தில் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன? டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

error: Content is protected !!