தமிழக காங்கிரஸ்: அதிகாரக் கனவும் எதார்த்த நிலையும்!

தமிழக காங்கிரஸ்: அதிகாரக் கனவும் எதார்த்த நிலையும்!

‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் நுங்கு…’ – தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் தற்சமயம் ஒலிக்கும் இந்த முழக்கம் வியப்பளிக்கிறது. 1967-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸாரின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், அந்த அதிகாரத்தைப் பெற அவர்கள் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

வரலாறு கற்பிக்கும் பாடம்

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை முடக்கிவிட்டு ஆட்டம் போட்டதன் விளைவை காங்கிரஸ் இன்றும் அனுபவிக்கிறது. அந்த கறைதான் தமிழகத்தில் அக்கட்சியின் அஸ்திவாரத்தை இன்றுவரை பலவீனப்படுத்தியுள்ளது. இழந்த செல்வாக்கை மீட்க மக்கள் பணிகளில் ஈடுபடாமல், காய்ந்து கிடக்கும் நிலையை மாற்ற குறுக்கு வழியில் அதிகாரத்தை எதிர்பார்ப்பது நியாயமா?

களப்பணியும் கட்சி வளர்ச்சியும்

அதிகாரத்தை அடைய வேண்டுமானால் கட்சியை அடிமட்டத்திலிருந்து வளர்க்க வேண்டும். ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்ற முனைப்பு ஸ்டாலினுக்கும் திமுகவினருக்கும் இருக்கும் அளவில் கூட, தமிழக காங்கிரஸாரிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று ஒரு தொகுதியில் வெல்லும் தைரியம் இவர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

தீர்வு என்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத போது கூட மக்களுக்காகப் பணியாற்றுவதே உண்மையான அரசியல். அதைச் செய்யத் தவறிவிட்டு, கூட்டணி பலத்தில் பதவியைப் பங்கிடத் துடிப்பது, “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளக்க ஆசைப்படுவதற்கு” சமம்.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”

  • எனும் வள்ளுவரின் வாக்கை காங்கிரஸார் தற்போதாவது படித்துப் பார்க்க வேண்டும். தனது பலத்தையும், எதிரியின் பலத்தையும் உணராமல் அதிகாரப் பசி கொள்வது தனக்குத் தானே ஊதிக்கொள்ளும் சங்காகிவிடும்.

ராகுல் காந்தி அவர்களே! உங்கள் கட்சியில் தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரனாக மாறுவதை அனுமதிக்கப் போகிறீர்களா? இல்லை, கட்சியைச் சீரமைக்கப் போகிறீர்களா?

செ,இளங்கோவன்

Related Posts

error: Content is protected !!