அத்வானிக்கு பாரத ரத்னா விருது ; அவரது இல்லத்திற்கே சென்று ஜனாதிபதி வழங்கினார்!

அத்வானிக்கு பாரத ரத்னா விருது ; அவரது இல்லத்திற்கே சென்று ஜனாதிபதி வழங்கினார்!

ந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா.

இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் பிரதமர்களான மறைந்த பி.வி.நரசிம்மராவ், சரண் சிங், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வரான மறைந்த கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவருர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நரசிம்ம ராவ் சார்பில் அவரது மகன் பிரபாகர் ராவ், சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சவுத்ரி, எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் நித்யா ராவ், கர்பூரி தாக்கூர் சார்பில் அவரது மகன் ராம்நாத் தாக்கூர் ஆகியோர் பாரத ரத்னா விருதை, ஜனாதிபதி திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், வயது மூப்பின் காரணமாக, மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை. இதனையடுத்து எல்.கே. அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!