உலக எலும்புப்புரை தினம்: மெளன நோய்க்கு எதிரான போர்ப் பிரகடனம்!

உலக எலும்புப்புரை தினம்: மெளன நோய்க்கு எதிரான போர்ப் பிரகடனம்!

இன்று உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day, அக்டோபர் 20). எலும்புகளைப் பலவீனப்படுத்தி, முறிவை ஏற்படுத்தும் இந்த ‘மெளன நோய்’ குறித்த விழிப்புணர்வை உலகளவில் மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எலும்புப்புரை (Osteoporosis) என்பது ஒரு மெதுவான, ஆனால் ஆபத்தான எலும்பு நோய் ஆகும். இது எலும்பின் திசுக்களைச் சிதைத்து, மிகச் சிறிய அழுத்தத்திற்குக் கூட எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது. இந்த நோயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டே, 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய எலும்புப்புரை கழகத்தால் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நாள், 1997 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளையால் (International Osteoporosis Foundation – IOF) முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

ஓசையற்ற உயிர்க்கொல்லி: ஏன் இந்த பெயர்?

எலும்புப்புரை நோய், மருத்துவ உலகில் “மெளன நோய்” (Silent Disease) அல்லது “ஓசையற்ற உயிர்க்கொல்லி” என்று அழைக்கப்படுகிறது.

இதற்குக் காரணம், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வலி, முதுகுத்தண்டு கோளாறு அல்லது இடுப்பு எலும்பு முறிவு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் வரை, தனக்கு நோய் இருப்பதை உணராமலோ அல்லது அறியாமலோ இருப்பதுதான். எலும்புத் திசுக்கள் சிதைவடைவதும், எலும்புகள் பலவீனமடைவதும் வெளிப்புறமாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. இதனால், திடீர் முறிவு ஏற்படும்போதுதான் நோயாளிக்கு நிலைமையின் தீவிரமே தெரிய வருகிறது.

இந்தியாவில் அபாய ஒலி: பெண்களே கவனம்!

உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்தும் இந்த நோயின் தாக்கம், இந்தியாவில் கவலை அளிக்கிறது. குறிப்பாக, பெண்களிடையே இதன் விகிதம் மிக அதிகம்.

ஆய்வுகளின்படி, இந்தியாவில் 50% பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு (Post-Menopausal) எலும்புப்புரை நோயால் பாதிக்கப்பட்டுத் துன்பப்படுகின்றனர். மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் (குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் குறைவது), எலும்பின் அடர்த்தியை வேகமாக குறைப்பதால், அவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது.

எலும்புப்புரையின் இயல்பும் விளைவுகளும்

எலும்புப்புரையின் முக்கிய இயல்பு, எலும்புத் திசுக்கள் சிதைவடைந்து, எலும்பு அடர்த்தி குறைவதுதான். இதனால் ஏற்படும் பாதிப்புகள்:

  • எலும்பு பலவீனம்: எலும்புகள் ‘உடையும் தன்மை’ கொண்டதாக மாறுதல்.
  • முதுகெலும்பு முறிவுகள்: முதுகுத்தண்டில் முறிவுகள் ஏற்பட்டு, உயரக் குறைவு மற்றும் கூன் விழுதல்.
  • இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture): இந்த வகை முறிவு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது அல்லது நீண்டகால ஊனத்திற்கு வழிவகுக்கக்கூடியது.

விழிப்புணர்வின் நோக்கம்: தடுத்தல், கண்டறிதல், சிகிச்சை

உலக எலும்புப்புரை தினத்தின் முக்கிய நோக்கம், இந்த நோயைத் தடுக்கும் விதமாகவும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

மக்கள் தங்கள் எலும்புகளையும், தசைகளையும் பாதுகாக்க, போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்துக்களை எடுத்துக்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், இந்த நாளில், எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை அனைவரும் பாராட்டவும், அவர்களது பணிகளை ஊக்கப்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது.

மெளன நோய் என்று அழைக்கப்படும் எலும்புப்புரையை எதிர்த்துப் போராட, ஒவ்வொரு தனிமனிதனும் விழிப்புணர்வோடு செயல்பட்டு, தமது எலும்பு ஆரோக்கியத்தை உறுதிசெய்வது இன்றியமையாதது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!