மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானோர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்!

மகளிர் உரிமைத் தொகை பெற  தகுதியானோர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்!

திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் தலைமையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலந்துகொண்டு முதல்வர் பேசியது: “தமிழ அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லும் வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்குவதற்கான முதற்கட்டக் கூட்டம் இது.

தலைமுறை தலைமுறைக்குப் பயனளிக்கப் போகிற இந்த மகத்தான திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் வகுப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொதுநோக்கு உண்டு. அதுதான் சமூகநீதி. நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றுவரை தமிழகத்தை வழி நடத்தும் கோட்பாடுதான், சமூகநீதி. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசையும், அதன்மூலம் பல புதுமையான, புரட்சிகரமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மாநிலம் தமிழகம்.

தமிழகத்தில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தினை வெற்றிகரமான ஒரு திட்டமாகச் செயல்படுத்திக் காட்டுவதில், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய உங்களின் பங்கு முக்கியமானது.இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இன்னும் 2 மாத காலமே உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதனை தங்களது தலையாய பணியாகக் கொண்டு, கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், இத்திட்டத்திற்கென வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடைதோறும் சிறப்பு முகாம்களை நீங்கள் நடத்திட வேண்டும். இம்முகாம்களில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீங்கள் செய்திடவேண்டும்.

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்.

தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் ஏற்படுத்தப்படவுள்ள மாநிலக் கண்காணிப்புக்குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திட வேண்டும்.இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள மகளிரின் சமூகப் பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழியில் செயல்படும் நமது அரசு, மகளிர் வாழ்வில் என்றென்றும் ஒளியேற்றிடும் விளக்காக அமையும் என இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சிறந்த, உன்னதமான, முன்னோடித் திட்டங்களின் மூலம் தமிழகத்தை ஒன்றிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முதல் மாநிலமாக மாற்றிடுவோம், அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை அறிவிப்பது எளிது. செயல்படுத்துவது கடினம். முறையாகத் திட்டமிட்டால் செயல்படுத்துவதும் எளிதாகும். என்ன செய்கிறோம் என்பதற்கு இணையானது எப்படிச் செய்கிறோம் என்பதாகும்.

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதல்வர் அலுவலகத்தையோ, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள அமைச்சர் உதயநிதியையோ அல்லது என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள். “கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது” ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்” என்று முதல்வர் பேசினார்.

இதன் பின்னர் பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்றும், ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்பத்தலைவி வரையறை:

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களைக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

ரூபாய் 2.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

விதிவிலக்குகள்:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!