சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு!

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு!

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளை தேர்வு செய்வார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு 5 நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியை (வயது 70) இந்தியா மீண்டும் வேட்பாளராக நிறுத்தியது. பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் (62) களமிறக்கப்பட்டார். இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது. பலகட்டங்களாக நடந்த தேர்தல்கள் முடிவில், 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது.

ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு மெஜாரிட்டி கிடைத்தது. அங்கு அவருக்கு 9 ஓட்டுகள் கிடைத்தன. ஆனால் பண்டாரிக்கு 5 ஓட்டுகள்தான் கிடைத்தன. சர்வதேச கோர்ட்டின் சட்டதிட்டப்படி ஐ.நா. பொதுச்சபையிலும், பாதுகாப்பு சபையிலும் மெஜாரிட்டி பெறுகிறவர்தான் நீதிபதி பணி இடத்துக்கு தேர்வு பெற முடியும். இரண்டு வேட்பாளர்களும் மெஜாரிட்டி பெறாததால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. எனவே, ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு சபை கூட்டுக் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடத்த பிரிட்டன் முயற்சி செய்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் நிரந்தர உறுப்பு நாடாக இருப்பதால், இந்த முயற்சி பிரிட்டனுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் சில நாடுகள் இதனை விரும்பவில்லை.

இந்நிலையில், பிரிட்டன் தனது வேட்பாளரை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது. மேற்கொண்டு தேர்தல் நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுசபையின் மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொள்வது தவறு என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் தனது வேட்பாளரை திரும்ப பெற்றதால் இந்தியாவின் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார். ஐ.நா.வின் மிகவும் சக்தி வாய்ந்த இந்த சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் நீதிபதி இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!