அதிமுக அரசு மீது வழக்கு! – ஸ்டாலின் எச்சரிக்கை

அதிமுக அரசு மீது வழக்கு! – ஸ்டாலின் எச்சரிக்கை

ஏகப்பட்ட திட்டங்கள் முடங்கிய நிலையிலும் பல வழக்கமான பணிகள் நடபெறாத நிலையிலும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருக்கிறது என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விவரம் இதோ:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர்மானக்கழகம் கொடுத்ததாலும், தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததாலும் இந்த மோசமான இழப்பைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சிஏஜியின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற்கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

சென்னை மக்களை பேரிடரில் சிக்க வைத்த டிசம்பர் 2015 வெள்ளம் பற்றிய சிஏஜி அறிக்கை அதிமுக அரசின் நிர்வாக தோல்விக்கு சான்றாவணமாக விளங்குகிறது. டிசம்பர் 2015 வெள்ளப் பேரிடருக்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பு என்று முகத்தில் அறைந்தது போல் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவுப்படி 2015 டிசம்பர் 1ம் தேதியன்று குறைந்தபட்சம் ஆறு மணி நேரங்களுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விட்டிருந்தால் போதும். ஆனால் 20,960 கன அடி நீரை திறந்து விட்டதோடு மட்டுமின்றி, 21 மணி நேரம் அப்படி தொடர்ந்து அன்றைய தினம் தண்ணீரை திறந்து விட்டதால்தான் சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியது என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

நிதி மேலாண்மை அவலத்தை கோடிட்டுக் காட்டியுள்ள சிஏஜி அறிக்கை, மாநில அரசு கடன்கள் எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்கு வரும். அப்போது மிக மோசமான கடனாளி மாநிலமாக மாறி, தமிழகம் கடனில் மூழ்கி விடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

அம்மா உணவகத்திற்காக சப்பாத்தி செய்ய வாங்கிய 15 மெஷின்களில் 12 வேலை செய்யவில்லை, பந்தோபஸ்து பணிக்கான கட்டணங்களை உரிய காலத்தில் மாநில காவல்துறை தலைவர் மாற்றி அமைக்காததால் அரசுக்கு 97.92 கோடி ரூபாய் நஷ்டம், அரசின் மெத்தனத்தால் 1,120 கோடி ரூபாய் வணிகவரி இழப்பு, 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 2016-17ம் ஆண்டில் 9366.11 கோடி ரூபாய் இழப்பு, மாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சிஏஜி அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருப்பது அதிமுக அரசின் முதல்வர்களும், அமைச்சர்களும் அனைத்து துறைகளிலும் படுதோல்வியடைந்து விட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருக்கிறது என்பது 2016-17 சிஏஜி அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

ஆகவே, செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரம் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து குற்ற வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டித், தண்டிக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!