சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்!- சிட்டி கமிஷனர் பேட்டி முழு விபரம்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்!- சிட்டி கமிஷனர் பேட்டி முழு விபரம்!

தமிழகத் தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட தளர்வுகளை இந்த முறை கடைபிடிக்காமல் 144 தடை உத்தரவுப்படி முழுமையாக 4 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஒட்டி சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விபரம்:

முகக்கவசம் அணியாமல் வெளிவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்குச் சென்று வர அனுமதி கிடையாது.

பணி நிமித்தமாக சென்னைக்கு வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதியில்லை

உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலை கடந்த முறை போல் மூடப்படும்

சென்னையில் உள்பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த திட்டம்

வெளியே இருந்து சென்னைக்கு வருபவர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும்

ஏற்கனவே இ-பாஸ் பெற்றிருந்தால் புதுப்பிக்க வேண்டும்

திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது

போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்களை கண்காணிப்போம்

சென்னை நகருக்குள் 288 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

காய்கறி, மளிகை பொருட்களை அருகிலிருக்கும் கடைகளிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும்.

கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு, தண்ணீர், சானிடைசர் வைக்க வேண்டும்

மத்திய, மாநில அரசு அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும்

அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது

பொதுமுடக்க உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு காவல் துறையினர் 788 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். 39 காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.

error: Content is protected !!