AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாத்துளிகள்!

By admin | Sep 09, 2026

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ளனர். கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகளாவிய அளவில் பல விருதுகளை வென்றுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினரின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராமேஸ்வரத்து மனிதர்களும் கடுமையான உழைப்பும்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், பல சிறிய விஷயங்களுக்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். படக்குழுவினருடன் இணைந்து ராமேஸ்வரம் பகுதி மக்களும் இந்தத் திரைப்படத்திற்காகக் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர் என்றும், அதற்குரிய ஆதரவை தமிழ் மக்கள் திரையரங்குகளில் தருவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

துணை நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் நன்றியுரை

நிகழ்வில் கலந்துகொண்ட துணை நடிகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த தனக்கு இதில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், நடிகர் கருணாஸ் எந்தவித அலட்டலும் இல்லாமல் தங்களோடு இயல்பாகப் பழகியதாகக் குறிப்பிட்டார்.

நடிகர் பிரதீப் மற்றும் ரைட்டர் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் தர்ஷன் ஆகியோர் படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அனுப்பப்பட்ட அனைத்து சர்வதேச விருது விழாக்களிலும் வெற்றிபெற்ற இப்படம், இந்திய திரையரங்குகளிலும் முத்திரை பதிக்கும் என்று நடிகர் தர்ஷன் நம்பிக்கை தெரிவித்தார்.

இயல்பான நடிப்பு மற்றும் சர்வதேச விருதுகள்

இயக்குநர் சொல்லிக்கொடுத்த இயல்பான நடிப்பே இப்படத்தின் பலம் என்று நடிகை நிரோஷா கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் கவி, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய இந்த திரைப்படத்தை நம் நாட்டு மக்களுடன் திரையரங்குகளில் பார்த்து ஆடிக் கொண்டாட நீண்ட நாட்களாகக் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.

‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களைத் தாண்டி தனக்கு இந்தப் படம் ஒரு சிறந்த அடையாளத்தைப் பெற்றுத் தரும் என நம்பிக்கையுடன் கூறினார் நடிகர் பாண்டி. கதையில் கதாநாயகனின் தங்கை மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சாஷா, கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் 13 சர்வதேச விருது விழாக்களில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கதைக்களமும் தமிழ் திரையுலகின் தாக்கமும்

இயக்குநர் சஜீவ் பழூர் பேசுகையில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற திரைப்படங்கள் சிறிய கருவில் இருந்து உருவாகி பெரிய வெற்றியைப் பெற்றவை என்பதை நினைவுகூர்ந்தார். தமிழ் மொழியின் மீது கொண்ட தீவிர காதலால் ‘என்ன விலை’ திரைப்படத்தை இங்கு இயக்கியுள்ளதாகவும், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.

20 ஆண்டுகால கனவும் கருணாஸின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு

விழாவின் முத்தாய்ப்பாகப் பேசிய நடிகர் கருணாஸ், 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தின் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் தன் திரைப்பயணம் தொடங்கியதை நினைவுகூர்ந்தார். மலையாள படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது 20 ஆண்டு கால ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றார்.

சாமானியர்களின் வாழ்க்கையைப் பேசும் இக்கதையை நம்பி தயாரிப்பாளர்கள் ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்றும், இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு முக்கியமான கேள்வியை இயக்குநர் சஜீவ் பழூர் இதில் எழுப்பியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

வழக்கறிஞராக நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்துள்ளதாகப் பாராட்டிய கருணாஸ், படம் திரைக்கு வருவதற்கு முன்பே ‘நெட்ஃபிலிக்ஸ்’ போன்ற முன்னணி ஓடிடி தளம் இதனை வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

‘நந்தா’ படத்திற்குப் பிறகு தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இது அமைந்துள்ளது என்றும், இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் தன் நடிப்பைப் பார்த்து முதன்முறையாகத் தன் மனைவி பாராட்டியதும், நடிகை நிமிஷா சஜயன் நெகிழ்ந்து பாராட்டியதும் இப்படத்தில் தான் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் உருக்கமாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.