தமிழ் சினிமாவில் மலைக்கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், வன்முறை மற்றும் அதிகாரப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படப் பட்டியலில்ல் இன்னொரு எண்ணிக்கை சினிமா இந்த ‘அமரம்’. திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால் நடிப்பில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் எந்த அளவுக்குக் கவர்கிறது?
கதைக்களம்
வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் முரட்டுத்தனமாகச் சுற்றித்திரியும் கதாநாயகன் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), சூழ்நிலை காரணமாக ஊர் முதலாளிகளின் சொற்படி ஆட்களைத் தீர்த்துக்கட்டும் கொலையாளியாக மாறுகிறான். அப்படி ஒரு சூழலில், கதாநாயகி ஷர்மிளாவின் (ஐரா அகர்வால்) தந்தையைக் கொலை செய்யும் பொறுப்பும் அருகனுக்கே வருகிறது. அந்த வேலையை அவன் முடித்த பிறகு, தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கத் துடிக்கும் ஷர்மிளா, அருகனைத் தேடி மலைக்கிராமத்திற்கு வருகிறார். அவருடன் சில அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் இணைய, அங்கு எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறுகின்றன. இதன் பின்னர் இவர்களின் பாதை எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதே கதை.
நடிப்பு மற்றும் உருவாக்கம்
அருகனாக வரும் ராஜன் தேஜஸ்வர், குறைந்த வசன பேசினாலும் தனது கண்கள் மற்றும் கரடுமுரடான உடல்மொழியால் கதாபாத்திரத்தைச் சுமக்க முயற்சித்துள்ளார். முக்கியமாக, க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அவரது அதிரடி பங்களிப்பு கவனிக்க வைக்கிறது.
நாயகி ஐரா அகர்வால், வெறும் பொம்மையாக இல்லாமல் கதையின் நகர்வுக்குப் பயன்படும் வலுவான கதாபாத்திரத்தில் தந்தை இழந்த சோகத்தையும் பழிவாங்கும் வெறியையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி போன்ற அனுபவ நடிகர்கள் கிராமத்து அதிகாரப் பின்னணியை ஓரளவுக்கு நம்பகத்தன்மையுடன் மாற்ற உதவியிருக்கிறார்கள்.
இயக்குநர் மலைவாழ் மக்களின் இருண்ட பக்கத்தையும், முதலாளிகளின் சுரண்டலையும் காட்ட நினைத்த விதம் பாராட்டுக்குரியது. பரத் குமாரின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் இயல்பான சூழலை அழகாகவும் அதே சமயம் இருண்மையாகவும் படம்பிடித்துள்ளது.
பலவீனங்கள்
முதல் பாதியில் நகரும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் தடாலடியாகச் சரிவடைகிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்கள் திரைக்கதையின் வேகத்திற்குப் பெரிய முட்டுக்கட்டையாக அமைகின்றன. எடிட்டிங்கில் கூடுதல் கவனமும், சில தேவையில்லாத காட்சிகளைக் கத்தரித்திருக்கவும் செய்திருக்கலாம். மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தீர்ப்பு
காதல், பழிவாங்குதல், அரசியல் மற்றும் வன்முறை என அனைத்தையும் மலைக்கிராம பின்னணியில் சொல்ல முயன்றிருக்கும் இத்திரைப்படம், இரண்டாம் பாதியின் தொய்வாலும் பலவீனமான திரைக்கதையாலும் முழுமையான நிறைவைத் தரத் தவறுகிறது.
ரேட்டிங்: 2.25 / 5