AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ரஷ்ய – உக்ரைன் போர் எதிரொலி : 19 ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரிப்பு!

By admin | May 01, 2022

க்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பணவீக்கம் அமெரிக்க பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர், ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்கலாக உள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷ்யா உக்ரைன் போர் மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பண வீக்கத்தால் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களில் விலை உயர்ந்துள்ளது. ஜெர்மனி மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. ஜெர்மனியின் ஐஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 சதவீதம் உயர்த்துவதற்கு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் இறக்குமதிக்கு ரஷ்யாவையே நம்பி இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது. இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.