AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

தேர்தல் விதி மீறல்:போன் மூலம் புகார் செய்யும் வசதி அறிமுகம்!

By admin | Mar 30, 2014

“தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் படம் எடுத்து சிடி-யில் பதிவு செய்து கொடுப்பது, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இ-மெயிலில் அனுப்புவது, தேர்தல் துறையின் இணைய தளத்தில் நேரடியாக மெயில் அனுப்புவது போன்ற வசதிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ‘ஆண்டிராய்ட்’ வகை செல்போன்களில் படமெடுத்து எங்களுக்கு நேரடியாக அனுப்பும் (www.elections.tn.gov.in/complaints) வசதியை இப்போது அறிமுகப்படுத்தி உள்ளோம். ” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஆண்ட்ராய்ட் தொழில் நுட்ப வசதி உள்ள செல்போன்கள் மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் http://elections.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று tamilnadu citizen poll watch-2014 என்பதை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.

அதை கிளிக் செய்தால், எப்படிப்பட்ட விதிமீறல்கள் என்பது தனித்தனி ‘லோகோ’வுடன் காட்டப்பட்டு இருக்கும். தேர்தல் விதிமீறலை புகார்தாரர் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அதற்கான லோகோவில் சேர்க்க வேண்டும். அதனுடன், எந்த மாவட்டத்தில், எந்த இடத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்பப்படும் படங்கள் இணையதளத்தில் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்படும். கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவார்கள். இதன்மூலம் தேர்தல் விதி மீறல்களை சம்பவ இடத்துக்கே சென்று தடுப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.ஆண்ட்ராய்ட் மூலம் புகார்களை அனுப்புபவர்கள், தங்களது பெயர், செயல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. புகாரர்தாரர் குறித்த தகவல்களை அனுப்பினாலும் அது ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.