AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

கழிவறையை பயன்படுத்துவோருக்கு ரூ.1 தரப்படும்! – ஆமதாபாத் விநோதம்

By admin | Jun 10, 2015

உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்று அரசவையில் ஒரு நாள் கேட்டார் மாமன்னர் அக்பர். அதற்கு, பீர்பல் சொன்ன பதில் அவருக்குப் பெருங்கோபத்தைத் தந்தது. மறுநாளுக்குள் தன் பதிலை நிரூபிக்காவிடில் பீர்பலுக்குத் தலை போகும் என்ற நிலை. மறுநாள் காலை, அக்பரை அவரது பள்ளியறையிலிருந்து அரண்மனைத் தோட்டத்துக்குச் செல்லும் வாயிற்கதவை அடைத்து விட்டார் பீர்பல். அரை மணி நேரம் கழித்துத் திறந்து விட, அதற்குள் தவித்துவிட்ட அக்பர் கதவை அடைத்தவரும் திறந்தவரும் யாரென்றும் பாராமல் மிக வேகமாக ஓடினார் தோட்டத்தை நோக்கி. சற்று நேரம் கழித்து கோபத்தோடு வந்த அக்பரிடம், வருத்தம் தெரிவித்த பீர்பல், தான் நேற்றுச் சொன்ன பதிலை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார். அக்பரும் உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்பதை உணர்ந்து கொண்டார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தியே ஆக வேண்டிய மிகச் சிலவற்றில் கழிவறையும் ஒன்று. நம் உடலின் சுழற்சியில் இன்றியமையாப் பங்கு வகிப்பதும் உடல்நலம் காப்பதிலும் கூட உடல்கழிவுகளை அகற்றுதல் அவசியமானதொன்று. ஓர் அரசு தன் குடிமகனு/ளுக்குச் செய்து தர வேண்டிய அடிப்படை உரிமையுமாகும். இதனிடையே இந்த அவஸ்தையை பூக்க உதவும் பொது கழிவறைகளை பயன்படுத்துகிறவர்கள் கட்டணம் கொடுத்து பயன்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொது கழிவறைகளை பயன்படுத்துகிறவர்களுக்கு கட்டணம் கொடுக்கிற வினோத திட்டம், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் அறிமுகம் ஆகிறது.

இங்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் திறந்தவெளியை இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பயன்படுத்தி வருகிற வழக்கத்தை ஒழிப்பதற்காக இந்த வினோத திட்டத்தை, மாநகராட்சி அமல்படுத்துகிறது.

இதன்படி, பொது கழிவறைகளை பயன்படுத்துகிறவர்களுக்கு, ஒரு முறை பயன்படுத்தினால் அதற்கு ரூ.1 தரப்படும்.ஆமதாபாத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு ஏதுவாக இந்த புதுமையான திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்துவதாக நிலைக்குழு தலைவர் பிரவிண் படேல் கூறினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ஆமதாபாத் நகரில் 315 பொது கழிவறைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு மத்தியில், 120 இடங்கள் திறந்தவெளி பொது கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதுதான், நாங்கள் அறிமுகம் செய்கிற இந்த கட்டணம் தரும் கழிவறை வசதி திட்டம்’’ என கூறினார்.