AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள்!

By admin | Sep 04, 2013

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண்ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்களுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற பிரச்னை, அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும். கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாமா?

‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. நீண்ட நேரம் வலியுடன் அவதி, கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவது, பிரசவத்துக்குப் பிறகு ஓய்வெடுக்காதது என இதற்குப் பல காரணங்கள். பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக்ஷனும் முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.

3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்னை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்…’’என்கிறார்கள் மருத்துவர்கள்