AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

By admin | Nov 05, 2013

இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து 2 நாள்களுக்கு பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இலங்கை அருகே கடந்த 4 நாள்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து குமரிக்கடலுக்கு சென்றது. அது திங்கள்கிழமை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிக்குச் சென்றுவிட்டது. தற்போது இலங்கை அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிக்குச் சென்றுவிட்டது. ஆனால் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

பரவலாக மழை: இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் பரவலாக மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.