AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஆயுர் வேத சிகிச்சை ஆரோக்கியம் தருவதுடன் செலவும் கம்மியாக்கும்! – மோடி தகவல்

By admin | Feb 03, 2016

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உலக ஆயுர்வேத திருவிழா 5 நாட்கள் நடக்கிறது. இதில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் ஊக்குவித்து வருகிறது. ஆராய்ச்சி களை ஒழுங்குமுறைப்படுத்துதல், தரமான உற்பத்தியில் உரிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் இதனை செயல்படுத்தி வருகிறது.அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் இதற்காக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா–இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா–ஓமியோபதி) மருந்துகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் ஒழுங்குமுறை திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த மருந்துகளுக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘தேசிய ஆயுஷ்’ திட்டத்தின்கீழ் செயல் படுத்தப்படும் இதில் தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை கட்டுப் படுத்துதல், நிதி உதவிகளை ஏற்படுத்துதல் போன்றவைகளும் அடங்கும். இப்போது ஆயுர் வேத மருத்துவத்துக்கு அதன் பாரம்பரியத்தாலும், புரிந்துகொள்ளக்கூடிய அணுகுமுறைகளாலும் உலகளவில் தொடர்புகள் உள்ளது. தினமும் ஆயுர்வேதம் எடுத்துக்கொள்வது ஒருவரின் வாழ்க்கையில் அமைதியை தருகிறது. மனிதனின் உடல் மற்றும் மனதுக்கு சுகாதாரத்தை அளிக்கிறது.

எனவே ஆயுர்வேதம் மற்றும் யோகா உள்பட பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாட்டை அதிகரிக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். போதிய அறிவியல் ஆய்வுகள், தரம் பற்றிய உறுதித் தன்மை இல்லாமை போன்ற காரணங்களால் ஆயுர்வேதம் அதிக மக்களால் பயன்படுத்தப் படாமல் உள்ளது. மற்ற நாடுகள் குறிப்பாக சீனா தங்கள் பாரம்பரிய மருந்துகளை ஊக்கப்படுத்த கொள்கைகளை யும், ஒழுங்குமுறைகளையும் வகுத்து வருகிறது. இதுபற்றி அவர்களின் அனுபவத்தில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சில பிரச்சினைகளை சரியான முறையில் தீர்த்து விட்டால், ஆயுர்வேதம் நிச்சயம் பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும். இதன்மூலம் உலகிலேயே இந்தியா குறைந்த கட்டணத்தில், பாரம்பரிய சிகிச்சை அளிப்பதில் முதலிடம் பெறும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆயுர்வேதா மற்றும் ஆயுஷ் திட்டத்தில் உள்ள மருத்துவ முறைகள் பற்றி பயிற்சி, திறன் மேம்படுத்து தல், தகவல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவைகளை வழங்க கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களும் ஆயுர்வேதம் தொடர்புள்ள தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்க முன்வர வேண்டும்.”
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.