AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ’பளார்’ விட்ட ஆட்டோ டிரைவர்!

By admin | Apr 08, 2014

கடந்த மாதம் வாரணாசி நகரில் கருப்பு மை, முட்டை ஆகியவற்றை வீசி அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், அரியானாவிலும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெற்கு டெல்லியின் தட்சிணாபுரி பகுதியில் அவர் பிரசாரம் செய்த போது பின்னால் இருந்து ஒரு வாலிபர் கெஜ்ரிவாலின் முதுகில் கையால் குத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் இன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபடி சென்ற அவர் சிலருடன் கை குலுக்கியபடி வாக்கு கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தொப்பி அணிந்திருந்த ஒருவர் சற்றும் எதிர்பாராத வகையில் கெஜ்ரிவாலின் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓங்கி ஒரு அறை விட்டார்.

அடித்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியினர் நைய்யப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் நிலைகுலைந்து போன கெஜ்ரிவால் சில நிமிடங்களுக்கு பின்னர் பா.ஜ.க.வை கடுமையாக தாக்கிப் பேசினார்.‘பிரதமர் ஆவதற்காக சிலர் வன்முறையில் இறங்குவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்துவதால் நாங்கள் அமைதியாகி விடுவோம் என்று நீங்கள் நினைப்பது தவறு. கடைசி மூச்சு உள்ளவரை எங்கள் போராட்டத்தை தொடருவோம், என்று அவர் ஆவேசமாக கூறினார். மேலும் கெஜ்ரிவாலை அடித்த காரணத்தை ஆட்டோ டிரைவர் லாலியிடம் கேட்டபோது, ‘கெஜ்ரிவால் ஒரு பொய்யர். டில்லி மக்கள் ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் வாங்கிக் கொண்டார். பின், டில்லி மக்களை அவர் ஏமாற்றி விட்டார்,’ என்றார்.