June 4, 2023

கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!

நக்சல் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அதிரடி கமாண்டோ படை பிரிவில் பெண்களை சேர்ப்பது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) அதிரடி கமாண்டோ பிரிவான கோப்ரா படைப்பிரிவு, நக்சல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகள், கிளர்ச்சி யாளர்களைக் கையாள ‘கோப்ரா’ என்ற படைப்பிரிவும் அதில் ஒன்று. 10 பட்டாலியன் கோப்ரா படையினர் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 6 பெண்கள் பட்டாலியன் படை உள்ளது. இந்நிலையில், கோப்ரா படைப்பிரிவிலும் பெண்களை சேர்ப்பது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் ஏ.பி.மகேஸ்வரி நேற்று டில்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கோப்ரா பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டிய சிப்பாய்கள் மனம் மற்றும் உடல் ரீதியில் கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.