June 2, 2023

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

கொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்த முடிவு செய்த அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க முறையாக வெளியேறி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகமெங்கும் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6-ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.