June 2, 2023

2018ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும்- சுப்ரீம் கோர்ட்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவரையும், அரசு ஊழியரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு விரோதமானது, அரசியலமைப்புச் சட்டம் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு வழங்கிய சிறப்புரிமைகளை இந்தத் தீர்ப்பு நீர்த்துப்போகச் செய்யும். எதிர்காலத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தத் தீர்ப்பினால் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்விசாரணைக்கு முன்பே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வகை செய்யும், 2018ஆம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும் இப்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா முழுவதும் தொடர்ந்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட’த்தில் இன்னும் கடுமையான ஷரத்துகளைச் சேர்த்து வலிமைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்தன. அப்போது ஆண்ட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் இது வலியுறுத்தப் பட்டது. காங்கிரஸ் தொடர்ந்து ஆண்ட 10 ஆண்டுகளில் அச்சட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. கடைசியாக, தங்கள் ஆட்சி முடியும் நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக சில ஷரத்துகளைச் சேர்த்து 2014 பிப்ரவரில் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியது. 2014 மே மாதம் பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. ஆட்சி அமைத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பாஜக அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத் திருத்த மசோதா’வை 2015-இல் கொண்டுவந்தது. பாஜகவின் சமூகநீதி அமைச்சர் தாவர்சந்த் கெலாட் 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் புதிய திருத்தங்களை நிறைவேற்றினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015, அதே டிசம்பர் மாதம் அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து மத்திய அரசிதழில் 2016 ஜனவரி 1-ஆம்தேதியே அறிவிப்பு வெளியானது. ஜனவரி 26-ஆம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. பாஜக அரசு கொண்டு வந்த புதிய திருத்தங்கள், பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாய மக்கள் வெளியில் தெரியாமல் அனுபவித்து வந்த கொடுமைகளைக் களையும் வகையில் அமைந்தன.

இந்நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர் பாக, 2018ஆம் ஆண்டு மார்ச்சில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்தது. புகார் கொடுத் தாலே எஃப்ஐஆர் பதிவு, உடனடி கைது நடவடிக்கை, முன்ஜாமீன் வழங்க மறுப்பது போன்ற சட்டப் பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. இதை அடுத்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், திருத்த சட்டம் ஒன்று 2018ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்துதான், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் அமர்வு, 2018ஆம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய பூர்வாங்க விசாரணையோ காவல்துறை மூத்த அதிகாரியின் அனுமதியோ தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு களில், பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று தெரியவரும்போது மட்டுமே நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் சகமனிதனை சமமாக நடத்துவதோடு, சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை பேணி பாதுகாக்க வேண்டும் என நீதிபதியான ரவீந்திர பட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தாராளமாக முன்ஜாமீன் வழங்குவது, நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும் என்றும், பூர்வாங்க ஆதாரம் இல்லை எனும் பட்சத்திலேயே நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்யலாம் என்றும் ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.