சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் 7 நாட்களுக்கு பிறகு மீண்டது!

உலக பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று கருதப்பட்ட சூயஸ் கால்வாயில் சிக்கிய சீன சரக்கு கப்பல் 7 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து 18,300 கண்டெய்னர்களுடன் எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் இந்த வழியாக தான் நடக்கிறது. இந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக இந்த கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தரைதட்டி சிக்கிய கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் சரக்குப் போக்குவரத்து தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. கப்பலின் முன்புறம் சேதமடைந்திருந்தாலும் கப்பல் பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது