ராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்!

ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்-ஐ நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார்.மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார்.
அதே சமயம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதலமைச்சருக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.
சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாங்கள் சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.இன்று அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் ஒன்றிணைந்து, தலைமைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் வாக்களித்துள்ள நிலையில், நாங்கள் எல்லோரும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட விரும்புகிறோம்’’ என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 102 பேர் கலந்து கொண்டனர்.