பாராளுமன்றத்தில் செங்கோல்- ஆர்எஸ்எஸ் சதியில், தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது.

பாராளுமன்றத்தில் செங்கோல்- ஆர்எஸ்எஸ் சதியில், தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமை, “சைவ வெள்ளாளர்களையும், மடங்களையும் தன் வயப்படுத்தும் பணியில்” சிறப்பாக செயல்படுகின்றனர். சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் தயாரித்த செங்கோலை, ( தமிழர் பெருமிதத்தை உசுப்பேற்ற) பாஜக வினர் “சோழர்கள் செங்கோல்” என்ற பரப்புரை செய்தனர். அதற்கடுத்து, தற்போது “திருவாவடுதுறை ஆதீனம் பரிசளித்த செங்கோல்” என்கின்றனர். செங்கோல் விஷயத்தில், வெள்ளாளர் – வேளாளர் சாதி சங்கங்கள் மோடியை உச்சிமோந்து கொண்டாடுகின்றன.

“1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் மூலம் பரிசளிக்கப்பட்ட நமது தேசிய வரலாற்றுச் சின்னமான புனித செங்கோலை, 28 மே’23 அன்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நிறுவுகிறார்.” என்ற பாஜக தலைவர், திருமதி வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிக்கையைப் பார்க்கவும்.

பாஜக ஆட்சியில், அரசியலமைப்புச்_சட்டம் மிதிக்கப்படுகிறது. “செங்கோல் தேசிய வரலாற்று சின்னம்” என்ற மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது வைதீக சைவ ஆதினங்கள் அதாவது பண்டார சன்னதிகள், செங்கோல் எடுத்து தர, புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட, பழங்குடியினரான குடியரசு தலைவர் புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை.

ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதில், வரலாறு நெடுக பார்ப்பனீயமும், வெள்ளாளியமும் கரங்கோர்த்து தான் சென்றுள்ளன. பக்தி இயக்கத்தில் எதிரெதிர் பகையாளிகளாக தோற்றம் காணப்பட்டாலும், கோவில் நிலவுடமை அமைப்பின் தலைமக்களாக நின்று கொண்டு மக்களை, விவசாயிகளை சுரண்டுவதில் ஒன்றுபட்டு தான் செயல்பட்டுள்ளார்கள்.

நாடு முழுவதுமுள்ள மடாதிபதிகளையும், மடங்களையும் இணைத்துக் கொள்வதில், அவற்றை நிர்வகிக்கும் உயர்சாதி வெள்ளாளர்களை தன்வயப்படுத்திக் கொள்வதில், நாக்பூர் சித்பவன் பார்ப்பன ஆர்எஸ்எஸ் தலைமை தெளிவாகவே இருக்கிறது.

சோழர் செங்கோல் பெருமை பேசும் ஆர்எஸ்எஸ் சதியில், தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது.

சந்திரமோகன்

error: Content is protected !!