புலம் பெயரும் தொழிலாளர்கள் அவலம்: சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து வழக்கு!

புலம் பெயரும் தொழிலாளர்கள் அவலம்: சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து வழக்கு!

ஆள் அரவமற்ற அகண்ட நெடுஞ்சாலை. சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் சாலைகள். உடலில் உள்ள நீரை உறிஞ்சியெடுக்கும் கோடை வெயில். உணவில்லை, குடிநீர் இல்லை, வாகன வசதி இல்லை ஆனால எதுவுமே அவர்களை தடுக்கவில்லை. சென்னை – கொல்கத்தா நெடுஞ் சாலையில், இப்படி ஒரு கொடுமையான சூழலில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த வட மாநிலங் களைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள். பீகார், ஒரிசா, ஜார்கண்ட, சட்டிஸ்கர், அசாம், மேற்கு வங்கம் என அவர்கள் செல்ல வேண்டிய தூரம் 2000 கிலோ மீட்டர்களுக்கும் மேல். இவ்வளவு தூரத்தையும் நடை பயணம் மூலமும், மிதிவண்டிகள் மூலம் கடக்க இவர்கள் துணிந்து நடந்து போய் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தொடர்ந்து தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவின்றி, சாலைகளில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு நடைபயணமாகவே சென்றனர்.

பலர் செல்லும் வழியில் உடல்நலக்குறைவாலும், விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசுகள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை வலுத்தது. ஆனால், தங்குமிடம், உணவு கிடைக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல் களைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர் கள் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப் படும் கொடுமையும் நடக்கிறது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுறும் காட்சிகளை உணர்ந்த சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து இன்று வழக்காகப் பதிவு செய்தது.

நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங் களை இலவசமாக மத்திய அரசும், மாநில அரசுளும் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து மத்திய அரசும், மாநில அரசுகள் தங்கள் பதிலை வரும் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுவார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!