வைரஸ் தொற்றில் இருந்து காக்கும் வேது எனப்படும் ஆவி பிடிக்கும் முறை!

வைரஸ் தொற்றில் இருந்து காக்கும் வேது எனப்படும் ஆவி பிடிக்கும் முறை!

நீராவி பிடிக்கும் முறை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. வியர்வையின் சுவை உப்பா, இனிப்பா என்று தெரியாத, உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத `ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்’ அத்தியாவசியமான சிகிச்சை. முக வீக்கம், நீர்க் கோவை, தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு ஆவி பிடித்து, அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீரை, வியர்வையின் மூலம் வெளியேற்றி குணம் பெறலாம். வேது பிடித்து நோய்களை விரட்டும் முறை, இன்றைக்கும் கிராம மக்களிடையே இருக்கிறது. அதனால் கொரோனா பரவும் இந்த கால கட்டத்தில் பல மருத்துவ முறைகள் இருந்தாலும் இயற்கையான ‘ஆவி பிடித்தல்’ என்பது அவசியமாகிறது. ஆம்.. நல்ல சூடான நீரில் ஆவி பிடிக்கும்போது ஆவி, நாசிகள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகளை அழித்து, மூக்கடைப்பு, சளி உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது.

இதுவரை மருத்துவம் கண்டுப்பிடிக்கப்படாத கொரோனா வைரஸ் தொற்று நுரையீரலைப் பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதால் இந்த காலகட்டத்தில் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இது மிகச்சிறந்த இயற்கையான எளிய வழிமுறை. அதே சமயம் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் பெஞ்சமின் கூறுகையில், “நுரையீரல் மிகவும் மென்மையானது. நீராவி மிகவும் வெப்பமானது. இரண்டும் ஒன்று சேர்வது சரியானது இல்லை. அதிக வெப்பமான நீராவில் நுரையீரல் செல்களில் பாதிப்பை எற்படுத்தலாம். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றால் பிரச்னை இல்லை. ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்று இருந்து, நுரையீரல் செல்களும் சேதமடைந்தால் அதனால் வரக்கூடிய பாதிப்பு மிகவும் அதிகம்” என்றார் என குறிப்பிட்டிருந்தார்களாக்கும்.

ஆனாலும் சூடான நீரில் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி,வேப்பிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இட்டு ஆவி பிடிக்கலாம், ஆவி பிடிக்கும்போது எந்த பொருளுடனும் மஞ்சள் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். உங்களால் தாங்கக்கூடிய அளவிலான சூடான நீரில் ஆவி பிடிக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும். அதேபோன்று ஆவி பிடித்தவுடன் சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைத்து அந்த துணியை வெந்நீரில் துவைத்து விடவும். ஏனெனில் முகத்தில் உள்ள அழுக்குகள் அதில் படிந்திருக்கும். கரோனா காலத்தில் வெளியில் சென்று வருவோர், நாள் ஒன்றுக்கு இருமுறை ஆவி பிடிப்பது வைரஸ் தொற்றில் இருந்து காக்கும்.

மேலும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வேது முறைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர சில எளிய குறிப்புகள்:

கப நோய்களுக்கு

உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல் தொல்லைப்படுத்தும்போது கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடித்தால் மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி உலா வரும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுபவர்கள், இந்த முறையை தாராளமாகப் பின்பற்றலாம். மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ‘வாலடைல் ஆயில்’ (Volatile oil), சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும் (Expectorant action) செயலைச் செய்கின்றன.

தலையில் நீர்க்கோத்துக்கொண்டு தலை பாரத்தையும், வலியையும் கொடுக்கும் நீர்க்கோவை நோயைப் போக்க எலுமிச்சை விதையையும், மஞ்சள் பொடியையும் நீரில் கலந்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலை பாரம் நீங்கும்.

சித்தர்களின் சூத்திரம்

‘யமக வெண்பாவில்’ வேது எனப்படும் ஆவி பிடிக்கும் முறை பற்றி சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். ‘அரிசனை நொச்சிவெடி யட்டறல் செங்கல்லே’ என்ற வரி வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் சாம்பிராணிக்கு ‘கிருமிநாசினி’ (anti-microbial) பண்பும், வீக்கமுறுக்கி (anti-inflammatory) தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வேது பிடிக்கும் நீரில் செங்கல் சேர்த்துப் பயன்படுத்துவதால், நீரின் சூடு நீண்ட நேரம் நிலைத்திருப்பது மட்டுமன்றி, பல வகையான நீர்ப் பிணிகள் நீங்கும்.

தைல மர வேது

தைல மர இலைகளைச் சேர்த்துச் செய்யப்படும் வேது முறையால், நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் அழியும். தைல மர இலைகளுக்கு, தசை இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால் (Anti-spasmodic action), சுவாசப் பாதையில் உண்டான இறுக்கம் தளர்வடையும். இதில் உள்ள ‘சினியோல்’ (Cineole) எனும் வேதிப்பொருளுக்குக் கோழையை அகற்றும் தன்மை உண்டு.

வாத நோய்களை விரட்ட

உடல் வலி, தொல்லை தரும் வாயு நீங்க, அலமாரி டப்பாக்களில் குவிந்து கிடக்கும் வலி நிவாரணி மருந்துகளை `படக்’ என்று எடுத்து விழுங்காமல், சூடேற்றிய நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, நிறைய உப்பு சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை உடலில் படுமாறு செய்யலாம். வாத நோய்கள் நீங்க ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து, அந்த ஆவியை முகரலாம்.

உடல் முழுவதும் வியர்வை பிடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகும்.

வேது பிடிக்கக்கூடாதவர்கள்

வறண்ட தேகம் கொண்டவர்கள், சொரியாஸிஸ், கரப்பான், படை போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த மிகைஅழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், காமாலை நோய்க்கு ஆட்பட்டவர்கள் வேது பிடிக்கக்கூடாது. பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் வேது பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

error: Content is protected !!