கோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா?

கோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா?

தமிழகம் முழுவதும் இன்று நெம்பர் ஒன் கொள்ளை, பள்ளிக்கூட வியாபாரம்தான்.. பொட்டல் காட்டில் உள்ள ஊருக்குக்கூட ஒரு வேன் வந்து ஷூ, டையோடு யூனிபார்ம் போட்ட குழந்தைகளை வாரிக்கொண்டு போகிறது. காரணம், நர்சரி பள்ளிகளில் சேர்த்துவிட்டாலே தங்கள் பிள்ளைகளுக்கு இங்கிலீசு தானாக பொத்துக்கொண்டு ஊற்றும் என்பது பெற்றோரின் நம்பிக்கை… நகரங்களிலும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளை நாடுவது இந்த இங்கிலீசு மோகத்தால்தான்.

உண்மையை சொல்லுங்கள்.. பல ஆயிரம் செலவு செய்து படிக்கவைக்கப்படும் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் குழந்தைகள் இங்கிலீசு மீடியத்திலேயே படித்தாலும் சரளமாக இங்கிலீசில் பேசுகிறார்களா? நிச்சயம் இருக்காது.. அப்படியே ஓரிருவர் பேசினாலும் அது ரிட்டர்ன் இங்கிலீசை மென்னு துப்புவார்கள்.. அவ்வளவு ஏன்? மேற்படி பள்ளிகளில் பாடம் போதிப்பவர்களுக்கே எந்த அளவுக்கு இங்லீஷ் சரளம் என்பது அவர்களுக்கு வெளிச்சம்..

இங்கிலீஷ் மட்டுமல்ல, இந்தி கிளாஸ் கோஷ்டிகளும் அப்படித்தான்.. இந்தியை பாடமெடுத்து படிக்கும் மாணவ மாணவியர், இந்தியில் பட்டம்பெற்று நடத்துபவர்கள் பற்றி அலசிப் பாருங்கள்..எத்தனை பேர் சரளமாக இந்தி பேசுகிறார்கள் என்று.. தமிழகத்தில் இன்றைய தேதிக்கு இந்தி கிளாஸ் படிக்காத தனியார் பள்ளி மாணவ மாணவியர் இருக்கவேமுடியாது. உங்கள் வீடுகளிலேயே இந்தி படிக்கும் குழந்தைகள் இருக்கலாம். அவர்களால் தத்தி தத்தியோ, அல்லது கொஞ்சம் வேகமாகவோ இந்தியை படிக்கமுடியும்- ஆனால் சரளமாக பேசவருகிறதாக என்று சோதித்து பாருங்கள்.. உங்களுக்கு உண்மை புரியவரும்.. சரி, நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.. ஒரு மொழியை ஆரம்ப கட்டத்தில் சரளமாக பேச எளிமையான வழி, அந்த மொழியினை எழுத, படிக்கத்தெரியாமல் இருப்பதுதான்..

வீட்டில் குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் தருணத்தில் நாம் பேசுவதை கேட்டு கேட்டு அப்படியே திருப்பிப்பேசும். மூன்று வயதில் நம்முடன் சரளமாக வாயாடும்.. ஏராளமான வார்த்தைகள் அதற்கு நன்றாக பழகிப்போயிருக்கும்.. இந்த இடத்தில் நன்கு கவனியுங்கள்.. குழந்தை பேசும் வார்த்தைகளின் எழுத்துவடிவம் அதற்கு தெரியவே தெரியாது. அதாவது தமிழ் மொழியில் குழந்தை சரளமாக பிச்சு உதறும்.. ஆனால் அ, ஆ. இ, ஈ என எந்த எழுத்தும் அந்த குழந்தைக்கு தெரியாது பள்ளிக்கூடம் போனபிறகுதான் அஆஇஈயே கத்துக்க ஆரம்பிக்கும்.

தமிழ் மட்டுமல்ல, வேறு மொழிகளையும் குழந்தைகள் கற்பது இப்படித்தான். இங்கே வா, கம் ஹியர், இதர் ஆவோ, இக்கட ரா என நான்கு மொழிகளில் நாம் சொன்னாலும் நான்கு மொழி ஓலிகளையும் கப்பென பிடித்துக்கொள்ளும்.. பள்ளிக்கே செல்லாத குழந்தைகள், தங்கள் தாய்மொழியுடன் மேலும் ஒன்றிரண்டு மொழிகளில் இப்படித்தான் சரளமாக பேசும்..

இந்த வயதில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை சுலபமாக குழந்தைகளால் மனதில் ஏற்றிக்கொள்ளமுடியும்.. ஏனெனில் கிளீன் சிலேட்போல இருக்கும் குழந்தைகளின் உள் வாங்கும் திறன் அவ்வளவு பலம் வாய்ந்தவை.. ஆச்சர்யமானவை.. Hear and Speak அதாவது காதில் வாங்கி அதை அப்படியே பேசுகிற நிலையில் இருக்கும்போது, தவறாக பேசி விடுவோமோ, இலக்கண பிழையோடு உளறுவோமோ என்ற பயமெல்லாம் இருக்காது.

இந்த தடுமாற்றம் இருப்பதால்தான் ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலைபட்டம் வரை என 17 ஆண்டுகள் பாடப்புத்தங்களில் இங்கிலீசோடு ஒருத்தர் கட்டிப்புரண்டும் ஸ்போக்கன் இங்கிலீசு சரியாகவே வருவதில்லை… சுற்றுலா தலங்களில் வழிகாட்டிகள், வியாபாரிகள் பல மொழிகளை சரளமாக பேசுவார்கள்.., அவர்கள் என்ன மொழியில் பேசுகிறார்களோ அதை அப்படியே எழுதிக்காண்பித்தால் அது என்ன மொழி என்று, எழுத்துக்களை வைத்து அவர்களால் சொல்லவே இயலாது..கூலித்தொழிலாளர்கள்கூட பிழைக்கப்போகும் இடத்தில் இப்படித்தான் கேள்வி ஞானத்தால் மாற்று மொழியில் ஆரம்ப கட்ட பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்கிறார்கள்..

ஒரு மொழியில் சரளமாக உரையாட அடிப்படை பேச்சுக்கு தேவையான வெறும் மூன்றாயிரம் வார்த்தைகள் தெரிந்து கொண்டால் போதும்.. குழந்தைகளுக்கு, ஒரு வயதுமுதல் சில ஆண்டு கள் வரை பல்வேறு மொழிகளை ஏற்றும் வழிகளை பாருங்கள்.இப்படி குழந்தைப் பருவத்தில் சுலபமாக காதுகளில் சில மொழிகளை ஏற்றி வைக்கும் வழிகளை விட்டுவிட்டு, கோட்டு சூட்டு, டை, ஷு போன்றவை அணிந்தால்தான் மொழி அறிவு வளர்ந்துவிடும் என்றெண்ணி அதற்காக கோமாளி பள்ளிகளிடம் பெரும் தொகையை செலவு செய்து ஏமாந்துபோகும் பெற்றோரை பார்த்து பரிதாபப்படுவதைத்தவிர வேறென்ன சொல்வது..?

ஏற்கனவே நாம் சொன்னதை கொரோனா காலத்தில் மீண்டும் நினைவு படுத்துகிறோம்..

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!