சதுரஅடி 3500 – விமர்சனம்!

மாதாந்திர சம்பளம் வாங்கும் சாதாரண ஜனம் முதல் கோடீஸ்வரர்கள் வரை சகலரும் வீட்டு மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது கொஞ்சம் கூட குறைய வில்லை. இத்தனைக்கும் மத்திய அரசு மனையோ, வீடோ வாங்க/ விற்க/. ஏகப்பட்ட கிடுக்கி பிடிகள் போட்டாலும் இந்த வீட்டு மனை மூலம் எக்கச்சக்கமான லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இன்றளவும் குறையவில்லை என்பதுதான் உண்மை. ஆம். சற்றேறகுறைய 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு 90 லட்சத்துக்கும் ஒரு கோடிக்கும் மேலாக விலை போவதைப் பார்க்கும் மக்கள், இனிவரும் காலத்திலும் அப்படி ஒரு லாபம் கிடைக்கும் என்று நினைக்கும் மக்களின் மன மாற்றத்தில் கொஞ்சம் கூட தடம் மாறவில்லை. மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு உள்ளிட்ட தேசமெங்கும் ஏராளமான ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் புதிது புதிதாக முளைத்து, பல லே-அவுட்டுகளைப் போட்டுவருகின்றன.
அதிலும் பத்தாண்டுகளுக்கு முன் மனை லே-அவுட்டில் குறைந்தபட்ச மனை அளவு 1,200 சதுர அடியாக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குமுன் இது 800 ச.அடியாகக் குறைந்தது. பிற்பாடு இது 600 ச.அடியாகக் குறைந்து, இப்போது வெறும் 400 அடிக்குக்கூட பிளாட்களைப் போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி மனை அளவைக் குறைப்பதால், மனைக்கான தொகையும் குறைந்து விடுகிறது. இதனால் சாதாரண மனிதர் கள்கூட மனை வாங்கக்கூடியதான நிலை உருவாகிவிடுகிறது. மேலும், மாத தவணை என்கிறபோது முன்பணம் ரூ.10,000, ரூ.15,000 வாங்கிக்கொண்டு, மீதிப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டச் சொல்கிறார்கள். இப்படி மனைகளை மாத தவணைத் திட்டத்தின் மூலம் விற்பதில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்களிடம் சதுரங்க வேட்டை சினிமாவில் வருவதுபோல் ஒரு மெகா மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடி குறித்த தகவல்கள் சினிமாவைப் போலவே படுசுவாரஸ்ய மானவை என்று முன்னரே வாரமிரு இதழ்களில் நாமே கட்டுரை வடித்திருத்தோம். இந்நிலையில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் மற்றும் மோசடிகள் குறித்தான படம்தான் ‘ சதுர அடி 3500’ என்று இப்பட ஆடியோ ரிலீஸான போது சில பலர் சொன்னதை நம்பி படம் பார்த்தோம்..
இப்படத்தின் டைட்டில் கார்ட் முடிந்தவுடன் வரும் ஓப்பனிங் காட்சியில் சென்னையில் மையப் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஒரு மிகப் பெரிய அபார்ட்மெண்டில், அதைக் கட்டிவரும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர் தூக்கில் தொங்குகிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை. அதே நேரத்தில் அவரது ஆவி ஆங்காங்கு தென்படுகிறது. இதில் நடக்கும் குளறுபடிகளை விசாரிக்க நியமிக்கும் சப் – இன்ஸ்பெக்டர் கருணா கண்டு பிடித்தது எப்படி? என்பதுதான் மிச்ச கதை.
தமிழ் சினிமாவுக்கு புதுசான ரியல் எஸ்டேட் மாஃபியாகள் சப்ஜெக்குடன் சமீப காலமாக கோலிவுட்டில் பேய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை நம்பி பிரமாதமான கதை, திரைக்கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று நம்பி போனால் படம் பார்க்க வருபவர்கள் அத்தனை பேருக்கும் மேல் மாடி காலியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் சகட்டுமேனிக்கு ஸ்கீரின் பிளே பண்ணி சொதப்பி விட்டார்கள். படத்தின் ஆரம்பத்தில் இன்வஸ்டிகேட் பண்ண வரும் ரகுமான் போஸ்டிங் என்ன?, அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார். சென்னையில் நடக்கும் கொலைக்கும் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்திற்கும் என்ன சம்பந்தம்? சென்னையில் நடக்கும்.ஒரே ஒரு (தற்)கொலை வழக்கை விசாரிப்பதாக சொல்லி எப்போதும் பயந்தபடி இருக்கும் டி.எஸ்.பி என்பவர் (நாசர்) போஸ்டிங் சிட்டியில் கிடையாது என்பதே தெரியாதாக்கும். அத்துடன் இறந்து போனதாக தன்னிடம் வந்த ஒருவர் உயிர் பிழைத்து வந்ததுடன் அவர் கொஞ்சி கேட்டதால் டெத் சர்டிபிகேட் கொடுத்ததாக சொல்லும் டாக்டர்.. அப்பப்பப்ப்பப்பா! தாங்க முடியலை.
நாயகன் நிகில் மோகன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான கட்டுடல் இருந்தாலும் நடிப்பை கொஞ்சம் கூட வெளிப்படுத்த வில்லை. இனியா மற்றும் ரஹ்மான் வந்து போகிறார்கள். பிரதாப் போத்தன் கேரக்டர் ஒட்டவும்மில்லை. தாதாத்தனத்தை வெளிப்படுத்தவும்மில்லை. மற்றபடி கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்ஷித் வாங்கிய பேமண்டுக்கு உழைத்திருக்கிறார்கள். பிரமாதமான நிலத்தில் பிரமாண்டமாக கட்ட வேண்டிய அடுக்கு மாடி வீட்டு திட்டத்தை தன் இயலாமையால் மண்ணுக்குள் புதைய வைத்த என்ஜினியர் ரோலை ஏற்று கச்சிதமாக தன் பணியை செய்திருக்கிறார் இயக்குநர் ஷரவண சுப்பையா.
மார்க் 5 / 2