என்னைதான் நம்பர் ஒன் இலக்காக ரஷ்யா வைத்துள்ளது!- உக்ரைன் அதிபர் உருக்கமான பேச்சு
ரஷ்யாவுக்கு எதிராக தனியாக போராடி வருகிறோம் எங்கள் நாடு தனித்து விடப்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் 18 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது பிப்ரவரி 24 காலையில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கிவ்-வில் பலத்த சத்ததுடன் குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர்.
இதனிடையே உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய உரையில், என்னை நம்பர் ஒன் இலக்காக ரஷ்யா வைத்துள்ளது என்று உருக்கமுடன் பேசியுள்ளார். எனது குடும்பம் அவர்களது 2வது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர். கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.