மகாத்மா காந்தி படுகொலை கமிஷன் அறிக்கையை வெளியாகப் போகுது!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா என்பவர் மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார். அண்மையில் இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மகாத்மா காந்தி கொலையில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் தப்பிச் சென்றது எப்படி? அவர்களை கைது செய்ய போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஆவல் கொண்டவர்களும், அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் முழுமையான ஆவண காப்பகத்தை அமைக்கும்படியும் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக வீர சாவர்க்கர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி கொலை சதியில் ஈடுபட்டார்கள் என்று கபூர் கமிஷன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறுகையில், “கபூர் கமிஷன் அறிக்கை தில்லியில் உள்ள இந்திய சட்டக் கல்வி நிலையத்தில் கிடைக்கிறது. இதேபோல மகாத்மா காந்தி படுகொலை, அது தொடர்பான விசாரணை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக அரசு வெளியிட வேண்டும்.திவரலாற்று நாயகர்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிய வைக்க வேண்டிய கடமை பிரதமர் அலுவலகம் உட்பட அதிகாரப்பூர்வமான துறைகளுக்கு உள்ளது. அண்மையில் நேதாஜி தொடர்பான பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதுபோல தேசத் தலைவர்களின் வாழ்க்கை, மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடுவதே சிறந்த வெளிப்படைத்தன்மைக்கு அடையாளமாகும்’ என்றார்.