‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான தடை நீக்கம்- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு!

நம் அண்டை தேசமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில் இயங்கி வந்த தொலைக்காட்சி மீது மோடி தலைமையிலான மத்திய அரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
கடவுளின் தேசமான கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியை மத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. இந்த சேனலுக்கு 10 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில், 2021 செப்டம்பர் மாதம் இத்தொலைக்காட்சி சேனலின் உரிமம் காலாவதியானது. இதனால் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டி சேனல் தரப்பில் விண்ணப்பித்த போது நாட்டின் பாதுகாப்பு கருதி உரிமத்தை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ‘மீடியா ஒன்’ சேனல் தரப்பில் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கேரளா ஐகோர்ட் மத்திய அரசின் முடிவை ஏற்று ‘மீடியா ஒன்’ சேனலின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த சூழலில், ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்த்து ‘மீடியா ஒன்’ மற்றும் கேரளா பத்திரிக்கையாளர்கள் சங்கம் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு வந்தது. அப்போது, கேரளாவின் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடையை நீக்கி, ஒளிபரப்பு உரிமத்தை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என்றும், வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.