புதுச்சேரி ;அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை நேரம் குறைப்பு!

புதுச்சேரி ;அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு  2 மணி நேரம் வேலை நேரம் குறைப்பு!

புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன்படி அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு வேலைக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 2030-ம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி ஒழிப்பு பற்றிய செயல் திட்டம் வகுப்பது சம்மந்தமான இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காசநோயை ஒழிக்க அத்தனை முயற்சியும் புதுச்சேரியில் நடக்கிறது. இதுவரை 27 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே எடுத்துள்ளோம். காசநோயை ஒழிக்க வேறு மாநிலங்களைவிட வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் ஏற்றுள்ளார். தற்போது அரசு துறையில் அமலாகும். வெள்ளிக்கிழமை காலையில் பணிநேரத்தில் சலுகை தந்துள்ளார். வேலைபற்றி வேறு மாதிரி சொல்லிக்கொண்டிருக்கும்போது, புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரூ.1,000 செல்வ சலுகையும், நேர சலுகையும் தரப்படுகிறது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.
பெண்கள் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் பணி பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது. உலகம் முழுவதும் இது செயல்படுத்துவதாக கருத்துதான் சொன்னேன். முதல்வர், அமைச்சர்கள் பேசிதான் புதுச்சேரியில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “வீடு சுத்தப்படுத்துவது உள்பட பல பணிகள் வெள்ளிக்கிழமை இருக்கும். அதனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் பணிநேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். காலை 9 மணிக்கு பதிலாக 11 மணி என்று பணிமாற்ற கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.

இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார். அதன்படி சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசு பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!