குடியரசுத் தலைவர் தேர்தல் : ஜூலை 18ம் தேதி நடைபெறப் போகுதுங்கோ!

நம் நாட்டின் முதல் குடிமகன் என்ற தகுதியை அளிக்கும் இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
தற்போதைய தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்து பதவியேற்க வேண்டும். நம் நாட்டை பொறுத்தவரை குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவரை மக்கள் நேரடியாக தேர்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகள் அவர்களை தேர்வு செய்கிறார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களான அனைத்து உறுப்பினர்களும், அதேபோல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை ஆகியவற்றில் நாமினேடட் உறுப்பினர்கள் எனப்படும் நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது. அந்த வகையில் இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி முடிவடையும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை மீதான பரிசீலனை ஜூன் 30-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 கடைசி நாள் எனவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதியும் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரை வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியலும் நிலவுகிறது. தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசு தலைவர் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே கருதப்படுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலையில்,புதிய குடியரசு தலைவர் வேட்பாளரை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது பெண் ஒருவராக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது. அல்லது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பாஜக கூட்டணி வாய்ப்பு வழங்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போது யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் களமிறங்கியுள்ளன என்பது அடிசினல் ரிப்போர்ட்.