ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார் – வீடியோ!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்திற்கான சிலை’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வைணவ மத ஆச்சார்யர்களில் ஒருவரான ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, 216 அடி உயரமுள்ள அவரது பிரம்மாண்ட சிலை திறந்து வைக்கப்பட்டது.
ராமானுஜர் இந்து பக்தி வழிபாட்டு மரபில் ஒரு முன்னோடியாவார். இவர் 1017 முதல் 1137 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் விசிஷ்டாத்துவைதத்தை முன்வைத்தவர். இவரைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமானுஜர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் கல்வி பயின்றவர் இவர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியின் பக்தர் இவர். இவரது சமய நடவடிக்கைகள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டிருந்தன. இவரது கல்லறை ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோயிலில் உள்ளது.
சில கோயில்களில் தலித்துகள் நுழைவது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை கோயில் அர்ச்சகர்கள் ஆக்கியது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை வைணவத்துக்குள் கொண்டு வந்தது உள்ளிட்டவற்றில் இவர் பங்காற்றியுள்ளார்.
அப்பேர்பட்டவருக்கும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய 5 உலோகங்களை கலந்து சிலை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் 2ஆவது உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது. உலகத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட மிக உயரமான சிலைகளில் ஒன்றாக ஹைதராபாத் ராமானுஜர் சிலை கருதப்படுகிறது. தாமரை மலர் மீது தியானமுடன் அமர்ந்த நிலையில் ராமானுஜர் நிலை அமைக்கப்பட்டுள்ளது. 120 கிலோ தங்கம் சேர்த்து சிலை உருவாக்கப் பட்டுள்ளது.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ள இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை.
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) 50வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
https://twitter.com/aanthaireporter/status/1489956395701391361
பின்னர் ஆராதனையில் பங்கேற்ற பிறகு ஆலயத்தை பார்வையிட்டார். பத்ரிநாத், அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட 108 விஷ்ணு கோவில்களின் பிரதிகள் அந்த கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதனை அவர் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டதுடன் பூஜை நடக்கும் இடத்தில் அமர்ந்து பங்கேற்றார்.