தி.மு.க.ஆட்சிக்கு வந்து ஓராண்டு: முதல்வர் அறிவித்த புதுத் திட்டங்கள் விபரம்!
தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதற்கு முன்னதாக, ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, திடீரென காரை நிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக வந்த 29c பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பேருந்திலேயே சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அப்போது பெண் பயணிகளிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது என கேட்டறிந்தார். இதற்கு பெண் பயணிகள் இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதன் பின்னர் தி.மு.க அரசு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது இந்த ஓராண்டில் நூற்றாண்டு போற்றும் வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் 5 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை உரையின்போது அறிவித்துள்ளார்.
அதன் விவரம் இதோ-
1. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
2. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
3. 25 மாநகராட்சிகளில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும்.
4. ரூ.1000 கோடி ஒதுக்கீட்டில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
5. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.