சீனியர் சிட்டிசன்கள் அதிகமுள்ள நாடும் சீனாதான்!
உலக மக்கள் தொகையில், எட்டு சதவீதத்துக்கும் மேல் முதியோர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சி, சராசரி வயதை அதிகரிக்க செய்கிறது. இந்தியாவில் மட்டும், 10 கோடி பேர், 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 70 வயதை தாண்டியவர்கள், நான்கு கோடி பேரும், 80 வயதை கடந்தவர்கள், 90 லட்சம் பேரும் இருக்கின்றனர். முதியவர்களில் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இதனிடையே சீனாவின் மக்கள்தொகையில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகி்ல் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடான சீனாவின் மொத்த மக்கள்தொகையில் தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர். அதேபோல், 16 முதல் 59 வயது வரையிலான மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இப்படியே சென்று கொண்டிருந்தால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் 30.7 பில்லியன் டாலர்களை வயதானோருக்கான பென்சன் உதவித்தொகையாக சீனா வழங்க வேண்டியிருக்கும். இந்நிலையில், சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இதுகுறித்து அவசர உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதில், முதியோரின் உடல்நலம் குறித்த திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.