அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது!

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. இதுவரை அங்கு 3 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது.
அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ’முதல் தடுப்பூசி நிர்வகிக்கப்படுகிறது. வாழ்த்துக்கள் அமெரிக்கா! உலகிற்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.