6 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கக் கட்டுப்பாடு!

6 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கக் கட்டுப்பாடு!

கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க நகைகள், விலை உயர்ந்த கற்கள், வைரம் வாங்குவோர் தங்களின் பான்கார்டு, ஆதார் எண்ணை நகைக்கடைக்காரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது. அந்த உத்தரவால் நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கிறது என்று மத்திய அரசுக்கு நகைக்கடை உரிமயாளர்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தததைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதமே அந்த உத்தரவை மத்திய அரசு நீக்கியது. இதனால் நகை வியாபாரம் வழக்கம் போல் சூடுபிடித்த நிலையில் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கும் போது அதன் விவரங்களைச் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் நிதி நுண்ணறிவுப் பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இது பற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச அளவில் பல நாடுகளில் நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான விற்பனை வரம்பு 10,000 டாலரைத் தாண்டும் போது அதுபற்றிக் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்தியாவிலும் அதுபோன்ற கட்டுப்பாட்டை (ரூ.6 லட்சத்துக்கு மேல்) விதிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறையானது கருப்புப் பண ஒழிப்பு மற்றும் நிதி மோசடியைக் கண்டறிவதில் அமலாக்கத் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிநபர் வருமான வரி விவகாரத்திலும் இக்கட்டுப்பாடு வருமான வரித் துறையினருக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

அதாவது நம் நாட்டில் கருப்புப் பணம், நிதி மோசடி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஷெல் நிறுவனங்களின் பதிவை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முறைகேடான பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பினாமி சட்டத்தையும் வலுப்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோடு, ரூ.50,000க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ரூ.6 லட்சத்துக்கும் மேலான மதிப்புக்கு நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடு விரைவில் விதிக்கப்படவுள்ளதாம்.

Related Posts

error: Content is protected !!